சப்-இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கிய காட்சி பதிவு: நடவடிக்கை எடுக்குமாறு சி.டி.யுடன் கோர்ட்டில் மனு தாக்கல்
கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளத்தை சேர்ந்த ஜான்தேவசிங் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் விவாகரத்து கேட்டு, எனது மனைவிக்கு எதிராக நாகர்கோவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன். அந்த முன்விரோதத்தில் என் மீது மாசாணமுத்து என்பவர் தென்தாமரைக்குளம் போலீஸ் நிலையத்தில் பொய் புகார் அளித்தார்.
புகாரை விசாரித்த சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி, என் மீது சாதாரண வழக்கு போட்டு விட்டு விடுவதாகவும், அதற்கு ரூ.7 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்றும் கேட்டார். லஞ்சம் கொடுக்காவிட்டால், பெரிய குற்றம் செய்ததாக வழக்கு பதிவுசெய்து ஜெயிலில் அடைத்து விடுவதாகவும் மிரட்டினார்.
கடந்த 12.5.2012 அன்று என்னை கட்டாயப்படுத்தி ரூ.3 ஆயிரம் லஞ்சமாக வாங்கி கொண்டார். அந்த பணத்தை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மருதநாயகத்திடம் கொடுத்தார். மறுநாள் மேலும் ரூ.2 ஆயிரம் கொடுக்கும்படி சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி கேட்டார். அதையும் கொடுத்தேன். அதன்பின்பும் ரூ.2 ஆயிரம் கேட்டு தொந்தரவு கொடுத்தார்.
கேட்ட பணத்தை கொடுக்காவிட்டால் பொய் வழக்குப்பதிவு செய்வோம் என்று சப்-இன்ஸ்பெக்டர்கள் 2 பேரும் மிரட்டி வருகின்றனர். 12.5.2012 அன்று என்னிடம் சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி, லஞ்சம் வாங்கியதை விலை உயர்ந்த கேமரா மூலம் போலீசாருக்கு தெரியாமல் என்னுடன் வந்திருந்தவர் வீடியோ படம் பிடித்தார். அதை சி.டியில் பதிவு செய்தேன்.
அதன்பின்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி சி.டியுடன் போலீஸ் டி.ஜி.பி. லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டி.ஜி.பி, கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு மனு அனுப்பினேன். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சப்-இன்ஸ்பெக்டர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி பணத்தை வாங்குவது போன்றும், அதை எண்ணிப்பார்ப்பது போன்றும், அதன்பின்பு பணத்தை பேண்ட் பாக்கெட்டில் வைப்பது போன்றும் உள்ள வீடியோ மற்றும் உரையாடலுடன் கூடிய சி.டியையும் நீதிபதியிடம், மனுதாரர் தரப்பு வக்கீல் ஜார்ஜ்பால் ஆண்டோ வழங்கினார். அதை பார்வையிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை வருகிற 7-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.
லஞ்ச புகாருக்கு உள்ளான சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி, நாகர்கோவில் ஆயுதப்படைக்கும், சப்-இன்ஸ்பெக்டர் மருதநாயகம் தூத்துக்குடி போலீஸ் நிலையத்துக்கும் ஏற்கனவே மாற்றம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.