காவல்துறை கஸ்டடியில் தாய், மகன் மரணம்: சிபிசிஐடி விசாரணை தேவை: மா.கம்யூ.,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணி, அவரது மகன் ஆனந்த் பாபு ஆகியோரை சந்தேகத்தின் பேரில் திருச்சி திருவரம்பூர் காவல் நிலைய அதிகாரிகள் அழைத்துச் சென்ற போது, மர்மமான முறையில் அவர்கள் மரணமடைந்துள்ளனர்.
வழியில் போலீஸ் வேனில் விஷம் அருந்தி தற்கொலை என்ற செய்திகள் ஒருபுறமும், சட்டவிரோதமாக இரண்டு நாட்கள் லாக் அப்பில் வைத்து சித்திரவதை செய்து கொலை என்ற செய்திகள் மறுபுறமும் வந்துள்ளன.
உள்ளூர் போலீசுக்கு ஏன் தகவல் தரவில்லை என்றும், வழியிலேயே மருத்துவமனைகள் இருந்தும், மிகுந்த காலதாமதத்தோடு தொலைவில் உள்ள திருச்சி மருத்துவமனைக்குக் கொண்டு வந்தது ஏன் என்றும் சந்தேகங்கள் எழுகின்றன.
காவல்துறையின் இத்தகைய நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தப் பின்னணியில், சிபிசிஐடி விசாரணை நடத்தி, உண்மையை வெளிக் கொணர்ந்து, நியாயம் வழங்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட காவலர்களை சஸ்பெண்டு செய்தால் மட்டும் போதாது, கைது செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.