கிரானைட் குவாரி ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்திலுள்ள அரசு புறம்போக்கு, பொதுப் பாதைகள், பஞ்சமி நிலங்கள், குளம் மற்றும் கண்மாய்களை ஆக்கிரமிப்பு செய்து, விதிகளை மீறி, தனியார் கம்பெனிகள் கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாகவும், தமிழ்நாடு கனிம நிறுவனத்துக்குக் குத்தகை உரிமம் வழங்கப்பட்ட பகுதியில் வெட்டி வைக்கப்பட்ட கற்கள் திருடப்பட்டிருப்பதாகவும் வந்திருக்கக்கூடிய செய்தி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. ஒலிம்பளி கிரானைட், சிந்து கிரானைட், பி.கே.பி, பி.ஆர்.பி எக்ளிபோர்ட் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் இந்த மோசடியில் ஈடுபட்டதாகவும், இதனால் அரசுக்கு ரூ.35,000 கோடிக்கு மேல் வருமான இழப்பு ஏற்பட்டுள் ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இது குறித்து அன்றைய மாவட்ட ஆட்சியர் திரு சகாயம் விசாரித்து, ஆதாரங்களுடன் அரசுக்கு அனுப்பியுள்ள அறிக்கை மேலே குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை உறுதிப்படுத்துவதாக உள்ளது. அத்துடன், எளிய கிராம மக்களின் வேளாண் நடவ டிக்கை பெருமளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறது என்றும், அவர்களது வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டுள்ளது என்றும், மறு பக்கம் தனியார் கிரானைட் நிறுவனங்கள் பிரமாண்டமாக, அசுரத்தனமாக பண பலத்திலும், ஆள் பலத்திலும் அச்சுறுத்துகின்ற அளவுக்கு எழுந்து நிற்கின்றன என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இது குறித்தான கிராம மக்களின் புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கனிம வளத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு அ றிவுறுத்தினாலும், பயத்தினாலோ அல்லது நிதி இலாபம் பெறும் நோக்கத்தினாலோ அவர்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய உண்மை என்று அ றிக்கை தெளிவாக அம்பலப்படுத்துகிறது. 19.05.2012 தேதியிடப்பட்டு, தொழில் துறை முதன்மை செயலாளருக்கு அறிக்கை அனுப்பப்பட்டும், இரண்டரை மாதங்களாக மாநில அரசு மௌனம் சாதித்தது ஏன் என்ற நியாயமான கேள்விக்கு அரசு விளக்கமளிக்க வேண்டும். கனிம வளங்கள் இந்த நாட்டின் சொத்து, அவை கொள்ளையடிக்கப்படவும், தனியாரின் லாப நோக்கத்துக்குப் பயன்படுத்தப்படவும் கூடாது என்கிற பின்னணியில், நடந்திருக்கக் கூடிய விஷயங்களைக் கடுமையான குற்றமாகக் கருதி, விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். தனியார் நிறுவன ங்களின் மீது மட்டுமல்லாமல், அரசு மற்றும் அதிகாரிகள் மீதும் சந்தேகத்தின் நிழல் ப டிந்திருப்பதால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தவறிழைத்தவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
விதிகளை மீறிய தனியார் நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும். வருமான இழப்பை, அவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும். தனியார் ஒப்பந்தக்காரர்களைப் பயன்படுத்தாமல், அரசின் டாமின் நிறுவனமே, இப்பணியில் ஈடுபடலாம். அப்போதும் சுற்றுச் சூழல் மற்றும் வேளாண் பிரச்னைகளைக் கணக்கில் எடுத்து, பணிகளை முறைப்படுத்திட வேண்டும்.