காதலிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு! அதிர்ச்சி அடைந்த காதலன் தற்கொலை!
சென்னை வியாசர்பாடி சர்மாநகர் சாஸ்திரிநகரை சேர்ந்தவர் அந்தோணி. இவர் ஸ்பென்சர் பிளாசாவில் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி அந்தோணியம்மாள். அரசு ஊழியர். இவரது மகன் சதீஷ் (25). எம்.பி.ஏ. படித்துள்ள இவர் தனியார் சிமெண்ட் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
இவர் அதே பகுதியை சேர்ந்த தனுஜா (பெயர் மாற்றம்) என்ற பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்தார். இருவரும் தினமும் பலமணி நேரம் செல்போனில் பேசுவார்கள். விடுமுறை நாட்களில் பார்க், பீச் என்று சுற்றினார்கள்.
இந்நிலையில் தனுஜா கடந்த ஒரு வாரமாக சதீஷுடன் செல்போனில் பேசுவதை தவிர்த்தார். எதற்காக தனுஜா தன்னுடன் பேச மறுக்கிறார்? என்று குழம்பித் தவித்தார். இதற்கிடையே 2 நாட்களுக்கு முன்பு சதீஷ் சர்மா நகரில் நடந்த சென்றபோது வேறு ஒருவரின் மோட்டார் சைக்கிளில் தனுஜா செல்வதை பார்த்தார். இதனால் அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவர் தனுஜாவுக்கு போன் செய்தார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சதீஷ், தனுஜா தன்னை விட்டு விட்டு வேறு ஒருவரை காதலிக்கிறார். இனி தனக்கு கிடைக்க மாட்டாளா என்று கலங்கினார். தனது நண்பர்களிடமும் இதுபற்றி கூறி புலம்பினார்.
இந்நிலையில் பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்றனர். சதீஷ் வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்தார். மாலை 3 மணிக்கு சதீஷிடம் அவரது தந்தை போன் செய்து பேசினார். அப்போது சதீஷ் நன்றாக பேசினார். அதன்பிறகு காதலியின் துரோகத்தை தாங்க முடியாத அவர் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.