ஹசாரே ஆதரவாளர் மீது இளைஞர் காங்கிரசார் புகார்
மத்திய சென்னை இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரஞ்சன்குமார் மற்றும் நிர்வாகிகள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது:- நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய மந்திரி சிதம்பரத்தின் வீட்டு முன்பு அன்னாஹசாரே ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து பேட்டி அளித்த நான், அன்னா ஹசாரே ஆதரவாளர்களுக்கு கண்டனம் தெரிவித்தேன். இது டி.வி.க்களில் வெளிவந்தது.
இதனை அன்னாஹசாரே ஆதரவாளரான ரமேஷ் சேதுராமன் என்பவர் காப்பி எடுத்து டுவிட்டர் இணையதளத்தில் போட்டு விமர்சனம் செய்துள்ளார். அதில் இவர்களை பார்த்தால் இளைஞர் காங்கிரசார் மாதிரி தெரியவில்லை. குண்டர்கள்போல இருக்கிறார்கள் என்று கூறியுள்ள அவர், தலித் சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் வகையிலும் கருத்து கூறியுள்ளார். எனவே அவர் மீது எஸ்.சி.,எஸ்.டி. சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி ரஞ்சன்குமார் கூறும்போது, ரமேஷ் சேதுராமனின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து தி.நகரில் அம்பேத்கார் சிலை முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றார்.