பெட்ரோலுடன் 5 சதவீத எத்தனால் சேர்க்க கர்நாடக அரசு அனுமதி: ஈசுவரப்பா
பெட்ரோலுடன் 5 சதவீத எத்தனாலை சேர்க்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த தகவலை துணை முதல்-மந்திரி ஈசுவரப்பா தெரிவித்தார்.
இதுகுறித்து கர்நாடக மேல்-சபையில் காங்கிரஸ் உறுப்பினர் தனஞ்செயா எழுப்பிய கேள்விக்கு 31.07.2012 அன்று பதில் அளித்து ஈசுவரப்பா கூறியதாவது:-
பெட்ரோலுடன் 5 சதவீத எத்தனாலையும், டீசலுடன் 10 சதவீத உயிரி எரிபொருளையும் சேர்க்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் பெட்ரோலியத் துறை வழிகாட்டுதல்படி பயோ டீசல் பயன்படுத்துவதில் கர்நாடக மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.
உயிரி எரிபொருளை தயாரிக்க விவசாயிகளுக்கு மானியமாக அரசு ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்குகிறது. இதுபற்றி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாநில உயிரி எரிபொருள் ஆணையம் சார்பில் 18 மாவட்டங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அரசு சார்பில் சில பொறியியல் கல்லூரிகள் மற்றும் வேளாண்மை கல்லூரிகளிலும் அத்தகைய மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. பெட்ரோலுடன் எத்தனாலை கலப்பது குறித்து தற்போதைக்கு அரசிடம் திட்டம் எதுவும் இல்லை.
அதே சமயம் டீசலுடன் உயிரி எரிபொருளை கலந்து அரசு வாகனங்கள் மற்றும் அரசு போக்குவரத்து வாகனங்களுக்கு பயன்படுத்துவதை கட்டாயம் ஆக்கி இருக்கிறோம்.
ஆயினும் உயிரி எரிபொருள் சாகுபடி மையத்தை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு கூறினார்.