தொடர்வண்டித்துறை சார்பில் 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்: ராமதாஸ்
டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் ஆந்திர மாநிலம் நெல்லூரில் வந்த போது திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் 35 பயணிகள் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘மின்கசிவு காரணமாக ரயில் விபத்து ஏற்பட்ட போதிலும், விபத்துக்கான உண்மையான காரணம் என்ன என்பது தெரியவில்லை. தீ விபத்து ஏற்பட்ட பெட்டியின் கதவுகளை திறக்க முடியவில்லை என்றும், அதனால்தான் உயிரிழப்பு அதிகரித்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இவை உண்மையாக இருந்தால் தொடர்வண்டி பராமரிப்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காட்டிய அலட்சியம் கண்டிக்கத்தக்கது.
இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பதை அறிய விசாரணை நடத்தப்பட வேண்டும். விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்தில் உயிரிழந்தேரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர்களின் குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 5 லட்சம் ரூபாய் இழப்பீடு போதுமானதல்ல. தொடர்வண்டித்துறை சார்பில் 10 லட்சம் ரூபாயும், அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்பட வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் தனியாக இழப்பீடு வழங்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.