பள்ளி, கல்லூரி பஸ்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை உருவாக்க 6 பேர் குழு அமைப்பு
பஸ் ஓட்டையில் விழுந்து மாணவி சுருதி பலியான சம்பவம் தொடர்பாக ஐகோர்ட் உத்தரவிட்டபடி, பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளின் பஸ்களுக்கு புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகளை உருவாக்குவதற்காக போக்குவரத்துத் துறை இணை கமிஷனர் (விதிகள்) ராதாகிருஷ்ணன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.
சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூர் இந்திரா நகரில் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்த மாணவி சுருதி (வயது 6), அந்தப் பள்ளிக்கூட பஸ்சில் வீட்டுக்கு திரும்பும் வழியில், பஸ்சின் தரைப்பகுதியில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்தாள். அப்போது பஸ்சின் பின் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி அதே இடத்தில் இறந்தாள். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதல் டிவிஷன் பெஞ்ச் தன்னிச்சை வழக்காக எடுத்து விசாரித்தது. நீதிபதிகள் உத்தரவின்பேரில் போக்குவரத்துத்துறை, கல்வித்துறை உயர் அதிகாரிகள் ஐகோர்ட்டில் ஆஜரானார்கள்.
இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
இதுபோன்ற மரணங்கள் நிரந்தரமாக தடுக்கப்பட வேண்டும். அதற்கான நிரந்தர தீர்வை அரசு ஏற்படுத்த வேண்டும். அதற்கு, மோட்டார் வாகன சட்டத்தின் 62-வது பிரிவின்படி தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. இதற்காக தனி விதிகளை ஏற்படுத்த வேண்டும். அதன்படி, பள்ளிக்கூட பஸ்களை கட்டுப்படுத்தி பராமரிக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் சிறப்பு பிரிவுகளை ஏற்படுத்தி, அந்த பஸ்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பள்ளிக்கூடத்திற்கு சொந்தமான வாகனம், ஒப்பந்த வாகனம் என அனைத்து வாகனங்களும் இந்த கண்காணிப்பிற்குள் கொண்டு வரப்பட வேண்டும். இந்த வாகனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான வரைவு விதிமுறைகளை தயாரித்து 2 வாரத்திற்குள் கோர்ட்டில் அரசு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி பஸ்களுக்கு என்ன வகையான கட்டுப்பாட்டு விதிமுறைகளை உருவாக்கலாம் என்பது குறித்து ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை தருவதற்காக 6 பேர் கொண்ட குழுவை அரசு அமைத்துள்ளது.
போக்குவரத்துத் துறை இணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் (விதிகள்) தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்தக் குழுவில், நெல்லை போக்குவரத்துத் துறை துணை கமிஷனர் பாலன், சென்னை கிழக்கு வட்டார போக்குவரத்து அதிகாரி (ஆர்.டி.ஓ.), பூந்தமல்லி மோட்டார் வாகன ஆய்வாளர் சம்பத்குமார், மாநில போக்குவரத்து ஆணையத்தின் உதவி செயலாளர்கள் லட்சுமி நாராயணன், லட்சுமிபதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழு, பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி பஸ், வேன் போன்ற வாகனங்களை கண்காணித்து ஒழுங்குபடுத்துவதற்கான புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகளை உருவாக்கும். இந்தப் புதிய விதிமுறைகள் ஒரு வாரத்திற்குள் அரசுக்கு சமர்ப்பிக்கப்படும். அதையடுத்து புதிய விதிமுறைகளை அமல்படுத்துவது தொடர்பாக சட்டத் துறையுடன் ஆலோசித்து, அரசு இறுதி முடிவு எடுக்கும். இதனிடையே, 2 வாரத்திற்குள் புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகள் கொண்ட அறிக்கையை ஐகோர்ட்டில் அரசு சமர்ப்பிக்கும் என்று போக்குவரத்துத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.