உழவன் உணவகம் மூடப்பட்டதால் விவசாயிகள் கண்ணீர்! அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!
கிராமப்புறத்தில், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்கள் தரமானதாகவும், கலப்படம் இல்லாமலும் இருக்கும் என்பதால், அவற்றுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.
அத்தகைய விவசாயிகளின் வாழ்க்கை மேம்படுத்தும் வகையில், மாலை நேரத்தில், உழவர் சந்தையில், உணகவம் திறக்க முடிவு செய்யப்பட்டு, 2009 செப்டம்பர் 14-ம் தேதி, நாமக்கல்லிலும், அக்டோபர் 23-ம் தேதி, திருங்செங்கோட்டிலும் உழவன் உணவகம் திறக்கப்பட்டது.
அப்போதைய மாவட்ட ஆட்சியர் சகாயம் தலைமையில் நடந்த விழாவில், நாமக்கல்லில், மத்திய சுகாதார இணை அமைச்சர் காந்திச்செல்வனும், திருச்செங்கோட்டில் முன்னாள் துணை சபாநாயகர் துரைசாமியும் திறந்து வைத்தனர்.
இங்கு, இட்லி, தோசை, கம்மங்கூழ், கேழ்வரகு களி, பக்கோடா, பாசிபயிறு உருண்டை, சுண்டல், வடை, ஆட்டுக்கால் கிழங்கு மூலிகை சூப், காய்கறி சூப், உளுந்தங்கஞ்சி உள்ளிட்டவை இந்த உணவகங்களில் விற்பனை செய்யப்பட்டன.
மாலை வேளையில், உணவகம் திறக்கப்பட்டதால், நாள் தோறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. பெற்றோர், தங்கள் குழந்தைகளுடன் வந்து, இட்லி, களி போன்ற உணவு வகைகளை வாங்கி உண்டு மகிழ்ந்தனர்.
அதன் காரணமாக, விற்பனையும் நாளுக்கு நாள் அதிகரித்தது. இங்கு விற்பனை செய்யப்படும் உணவு வகைகள் அனைத்தும், சுவையாகவும், தரமானதாகவும், சுத்தமாகவும் இருந்ததால், பெருமளவில் வந்து ருசிபார்த்துச் செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.
நாமக்கல் உழவன் உணவகத்தில், இதுவரை மூன்று கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், இரண்டு பேர் உணவகத்தில் கிடைத்த வருவாயை கொண்டு கார் வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கலெக்டர் சகாயம் மாற்றப்பட்டார். அதை தொடர்ந்து, உழவன் உணவகத்தில், அதிகாரிகளின் கெடுபிடி நாளுக்கு நாள் அதிகரித்தது. துவக்கத்தில், 25 கடைகளுக்கு மேல் இருந்த உணவகத்தில், அதிகாரிகளின் கெடுபிடியால், தற்போது மூன்று கடையாக குறைந்தது.
அதிகாரிகள், உழவன் உணவகத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து, நீதிமன்றத்தில், "ஸ்டே ஆர்டர்' வாங்கப்பட்டது. அந்த ஆர்டரின் காலம் முடிவடைந்தது. அதை தொடர்ந்து, நேற்று, அதிகாரிகள் அதிரடியாக உழவர் சந்தைக்கு பூட்டு போட்டனர்.
அதனால், விற்பனை செய்ய வந்த விவசாயிகள், கேட் வெளியே கடை விரித்துள்ளனர். பொதுமக்களும் தெருவில் நின்று உணவு பதார்த்தங்களை வாங்கி உட்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
உழவன் உணவகத்தை ஊக்கப்படுத்த, அதிகாரிகள் விருப்பம் காட்டவில்லை. மேலும், அதிகாரிகளுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டது. இதுவே, அதிகாரிகளின் கெடுபிடிக்கு காரணமாக கூறப்படுகிறது. அதிகாரிகளின் இந்த கெடுபிடியால், விவசாயிகள் என்ன செய்வது என தெரியாமல், விழிபிதுங்கியுள்ளனர். மாவட்ட நிர்வாகம், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது