விதவைகளுக்கு வாழ்வு கொடுப்பதாக 8 பெண்களை மணந்து மோசடி: சென்னையில் என்ஜினீயர் கைது
ஊனமுற்ற, விதவைகளுக்கு வாழ்வு கொடுப்பதாக கூறி 8 பெண்களை மணந்து மோசடி செய்த என்ஜினீயர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
கைதான என்ஜினீயர் பெயர் ரத்தீஷ் (வயது 30) கேரள மாநிலம் திருவனந்தபுரம் இவரது சொந்த ஊராகும்.
என்ஜினீயரிங் படித்துள்ள இவர் தனியார் கம்பெனியில் கை நிறைய சம்பளத்துடன் வேலைபார்ப்பதாகவும், கணவனை இழந்த விதவைப்பெண்கள் மற்றும் ஊனமுற்ற பெண்களை திருமணம் செய்ய விரும்புவதாகவும் தகுதியுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம் என்றும் இவர் இணையதளத்தில் விளம்பரப்படுத்தினார்.
இதை நம்பி ஏராளமான ஊனமுற்ற பெண்களும், விதவை பெண்களும் இவரை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து இவர் 8 பெண்களை திருமணம் செய்துள்ளார். அனைவரின் கற்பையும் சூறையாடிவிட்டு, அவர்களிடம் நகை, பணத்தையும் அபகரித்துள்ளார்.
தூத்துக்குடியைச் சேர்ந்த சுகன்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற ஊனமுற்ற பெண்ணை கடந்த ஏப்ரல் மாதம் மணந்துள்ளார். இந்த பெண்ணிடமும் பணம் நகையை பறித்துள்ளார். கற்பையும் சூறையாடி இருக்கிறார்.
சுகன்யா கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவின் வரதட்சணை ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
துணை கமிஷனர் ராதிகா மேற்பார்வையில், உதவி கமிஷனர் சியாமளா நேற்று இரவு என்ஜினீயர் ரத்தீஷை கைது செய்தார். அவரிடம் தீவிர விசாரணை நடக்கிறது.