தமிழ் பட உலகை தாக்கிய புயல் ஓய்ந்து விட்டது!
ராசு மதுரவன் டைரக்டு செய்துள்ள `பாண்டி ஒலிபெருக்கி நிலையம்' என்ற புதிய படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை வடபழனியில் உள்ள கமலா தியேட்டரில் நேற்று காலை நடந்தது.
இந்த படத்தில், `பெப்சி' எஸ்.விஜயன் மகன் சபரிஸ் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். கதாநாயகி யாக சுனைனா நடித்து இருக்கிறார். பாடல்களை, பட அதிபர் ஆர்.பி.சவுத்ரி வெளியிட்டார்.
விழாவில், வினியோகஸ்தர்கள் சங்க செயலாளர் `கலைப்புலி' ஜி.சேகரன் கலந்து கொண்டு பேசினார்.
அவர், ''சரித்திரத்தில் நிறைய வீழ்ச்சிகளை நாம் படித்து இருக்கிறோம். ஏவி.மெய்யப்ப செட்டியார், எஸ்.எஸ்.வாசன், ஏ.எல்.சீனிவாசன், எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் போன்ற ஜாம்பவான்களை கொண்ட தமிழ் பட உலகம், ஒரு காலத்தில் செழிப்பாகவே இருந்தது.
மூன்றரை வருடங்களுக்கு முன், `கார்பரேட்' நிறுவனங்கள் தமிழ் பட உலகுக்குள் புகுந்ததும், அழிவு ஆரம்பமானது. சரித்திரத்தில் சாம்ராஜ்யங்கள் வீழ்ச்சி அடைந்தது போல், தமிழ் திரையுலகிலும் கார்பரேட் என்ற கடும் புயல் தாக்கி, பேரழிவு ஏற்பட்டது.
கார்பரேட் நிறுவனங்களால் சில பெரிய நடிகர்களும், சில பெரிய தொழில்நுட்ப கலைஞர்களும் வாழ்ந்தார்கள். அவர்களுக்கு அந்த நிறுவனங்கள் பணத்தை வாரி இறைத்தது. இதனால் பல பட அதிபர்களும், வினியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் காணாமல் போய்விட்டார்கள்.
அந்த காலம் இப்போது மாறிக்கொண்டிருக்கிறது. தமிழ் பட உலகை தாக்கிய கார்பரேட் புயல் ஓய்ந்து விட்டது. இனி, நல்ல காலம்தான். `பாண்டி ஒலிபெருக்கி நிலையம்' போன்ற தரமான படங்கள் வெற்றி பெறும்’’என்று பேசினார்.