சாஃப்ட்வியூ மா.ஆண்டோபீட்டர் மாரடைப்பால் மரணம்!
சாஃப்ட்வியூ கணினி நிறுவனத்தின் நிர்வாக தலைவர் மா.ஆண்டோபீட்டர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 45.
கணித் தமிழ்ச் சங்கத்தின் பொறுப்பாளராக இருந்து, உலக இணைய மாநாடுகளில் முக்கியப் பங்கு வகித்தவர். கிராமப்புற மாணவர்களின் முன்னேற்றத்திற்காக தமிழில் இதழியல் வகுப்பு மற்றும் விசுவல் கம்யூனிகேசன் வகுப்புகளை திறம்பட நடத்தியவர்.
சிஎஸ்சி நிறுவனத்துடன் இணைந்து தமிழகம் முழுவதும் கணினி வரைகலை உள்ளிட்ட வகுப்புகளை நடைமுறைக்கு கொண்டுவந்து, குறைந்த கட்டணத்தில் பலரும் இப்பயிற்சி பெற உதவி செய்தவர்.
சாஃப்ட்வியூ நிறுவனம் தமிழில் மென்பொருள் தயாரித்தல், தமிழ் ஃபான்ட் தயாரித்தல் ஆகியவற்றில் முதன்மை பெற்றிருந்தது. கணினி துறையில் தமிழ் எழுத்துருக்களை பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததில் சாஃப்ட்வியூ நிறுவனத்தின் பணி பெருமைக்குரியது. குழந்தைகளுக்கு தமிழ்வழிக்கல்விக்கான பல குறுங்தகடுகளை வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமா.காம் என்ற இணைய பத்திரிகையை முதலில் ஆரம்பித்தது.
கடந்த ஜனவரி மாதம் சென்னை புத்தகக் கண்காட்சியில், சாஃப்ட்வியூ அரங்கில் தன்னுடைய இதழியல் வகுப்பில் பயின்ற மாணவர்கள் மூலம், வேர்கள் என்ற பத்திரிகையை வெளியிட்டார். அதில் நக்கீரன் பற்றிய விளம்பரமும் செய்தியும் இடம்பெற்றிருந்ததை கவனித்த காவல்துறையினர், சாஃப்ட்வியூ அரங்கை வீடியோ படம் எடுத்து அச்சுறுத்தியபோது, தன்னுடைய வளர்ச்சிக்கு நக்கீரன் தான் முக்கிய காரணம் என்று அழுத்தமாக பதிவு செய்தார் ஆண்டோபீட்டர்.
சாஃப்ட்வியூ கணினி நிறுவனத்தின் நிர்வாக தலைவர் மா.ஆண்டோபீட்டர் மறைவிற்கு நக்கீரன் குழுமம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. தொடர்புக்கு: No 4, Ramani Nagar,New Lakshmipuran,kolathurchennai 99