2 மகன்களை கொலை செய்துவிட்டு தந்தையும் தற்கொலை
கார் டிரைவர் தனது 2 மகன்களை கோவில் குளத்தில் தள்ளி கொலை செய்துவிட்டு, தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர் மாவட்டம் ஆற்காடு சத்யா நகர் குளக்கரை தெருவை சேர்ந்தவர் உமாபதி (வயது 40). இவரது மனைவி டில்லி. இவர்களுக்கு மோகனசுந்தரம் (9), விஜய் (6) என்ற 2 மகன்கள் உள்ளனர். உமாபதி சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
அவரது மனைவி டில்லி, தனது 2 மகன்களுடன் காஞ்சீபுரத்தில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று மாலை உமாபதி காஞ்சீபுரம் வந்தார். தனது 2 மகன்களையும் அழைத்துக் கொண்டு காஞ்சீபுரம் அருகே உள்ள திருப்புட்குழி என்ற இடத்தில் உள்ள பிரசித்திபெற்ற விஜயராகவ பெருமாள் கோவிலுக்கு சென்றார்.
அந்த கோவில் குளத்தில் தனது 2 மகன்களையும் தள்ளிவிட்டார். சிறிது நேரத்தில் அவரும் குளத்தில் குதித்தார். அவர்கள் 3 பேரும் மூச்சுத் திணறி குளத்தில் மூழ்கி இறந்தனர். அரை மணி நேரத்தில் 3 பேரின் உடல்களும் கோவில் குளத்தில் மிதந்தன.
கோவிலுக்கு வந்த பக்தர்கள் இதனைப் பார்த்துவிட்டு கிராம நிர்வாக அதிகாரி ஏழுமலைக்கு தகவல் தெரிவித்தனர். அவர் பாலுச்செட்டி சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மனோகரன் உத்தரவின் பேரில் நகர போலீஸ் துணை சூப்பிரண்டு சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் சிவபாத சேகரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் 3 பேரின் உடல்களையும் மீட்டனர். உடல்களை போலீசார் பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
உமாபதி தனது பாக்கெட்டில் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தில், என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. 20 ஆண்டுகளாக நான் டிரைவராக வேலை பார்த்து வருகிறேன். பெரும்பாலும் நான் ஓட்டலில் தான் சாப்பிடுகிறேன். இதனால் எனது உடல் பலவீனம் அடைந்துள்ளது. உடல் வலி, மூட்டு வலி, உடல் சோர்வு ஆகியவற்றால் நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன்'' என்று எழுதியுள்ளார்.
ஆனாலும் அவர் குழந்தைகளை குளத்தில் தள்ளி கொலை செய்வதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. உடல் நலமில்லாததால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.