ஊர்வசி கோர்ட்டுக்கு குடிபோதையில் வந்தார்: நடிகர் மனோஜ் கே.ஜெயன்
நடிகை ஊர்வசிக்கும், நடிகர் மனோஜ் கே.ஜெயனுக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குஞ்ஞாச்சா (12) என்ற மகள் உள்ளார். ஊர்வசியும், மனோஜ் கே.ஜெயனும் கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்றனர். அவர்களது மகள் குஞ்ஞாச்சா ஜெயனிடம் ஒப்படைக்கப்பட்டார்.
>
ஊர்வசியுடன் குழந்தையை அதிக நாட்கள் அனுப்ப முடியாது என்று கோரி ஜெயன் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. அப்போது ஜூலை 6-ந் தேதி முதல் ஒருவாரம் ஊர்வசியுடன் மகளை அனுப்ப வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.
எர்ணாகுளம் குடும்ப நல கோர்ட்டுக்கு குஞ்ஞாச்சாவை ஜெயன் அழைத்து வர வேண்டும், அங்கிருந்து ஊர்வசி அவரை அழைத்து செல்லலாம் என கோர்ட்டு உத்தரவில் கூறப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று எர்ணாகுளம் குடும்ப நல கோர்ட்டுக்கு ஜெயன் தனது மகளை அழைத்து வந்திருந்தார்.
விசாரணையின் போது ஊர்வசியுடன் செல்ல அவரது மகள் குஞ்ஞாச்சா மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து குஞ்ஞாச்சா, தந்தை ஜெயனுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
கோர்ட்டில் இருந்து வெளியே வந்த ஜெயன் செய்தியாளர்களிடம், ’’ஊர்வசி கோர்ட்டுக்கு குடிபோதையில் வந்தார். அவர் பல ஆண்டுகளாக போதைக்கு அடிமையாகி கிடக்கிறார். இதனால் எனது குழந்தை அவருடன் செல்ல மறுத்து விட்டது. நீதிபதியும் குழந்தையை நானே அழைத்து செல்ல உத்தரவிட்டார்’’என்று கூறினார்.