திருப்பதி மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்து தொடங்கியது!
ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, திருப்பதி மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்து இன்று (03/07/2012) தொடங்கியது. திருப்பதி ரெயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில், திருப்பதி எம்.பி. சிந்தா மோகன், பச்சைக்கொடி அசைத்து ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். இது, வாரம் 3 நாள் இயக்கப்படும் ரெயில் ஆகும். திருப்பதியில் இருந்து செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளில் காலை 10.40 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் இரவு 10.35 மணிக்கு மன்னார்குடி சென்றடையும். மன்னார்குடியில் இருந்து புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் காலை 5.30 மணிக்கு புறப்பட்டு அதே நாள் மாலை 4.35 மணிக்கு திருப்பதியை அடையும். இந்த ரெயில், பகலா, சித்தூர், காட்பாடி, வேலூர் கண்டோன்மெண்ட், ஆரணி ரோடு, திருவண்ணாமலை, திருக்கோவிலூர், விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, பேராளம், திருவாரூர், நீடாமங்கலம் ஆகிய ஊர்களில் நின்று செல்லும்.