கருணை மனுக்கள் பரிசீலனை தாமதம் : கலாம் விளக்கம்
தூக்குத் தண்டனை பெற்றவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது, மிகவும் சிக்கலான விஷயம். எந்த ஒரு ஜனாதிபதியுமே, இந்த பணியை, சந்தோஷமாகச் செய்வதில்லை,'' என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், தான் எழுதியுள்ள, "டர்னிங் பாயின்ட்ஸ்' என்ற புத்தகத்தில், ''தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்களை பரிசீலித்து, அதில் முடிவெடுப்பது என்பது, மிகவும் சிரமமான விஷயம். இது தொடர்ச்சியாக தொடர்ந்து கொண்டிருக்கும் பிரச்னை. எந்த ஜனாதிபதியுமே, இதை மகிழ்ச்சியுடன் செய்வதில்லை. குற்றத்தின் தீவிரம், தண்டனை பெற்றவரின் சமுதாயம் மற்றும் நிதி அந்தஸ்து ஆகியவற்றை கருத்தில் கொள்வதுடன், இந்த விவகாரங்களைக் கையாளும் போது, சாதாரண மனிதன் என்ன நினைப்பான் என்பதை எல்லாம் கருத்தில் கொண்டே முடிவெடுக்க வேண்டும்.
பல கருணை மனுக்கள் நிலுவையில் இருப்பதற்கு, இதுவே காரணம். பல கருணை மனுக்கள், ஜனாதிபதி மாளிகையில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. இவற்றை கையாளுவது மிகவும் சிரமம். தனஞ்செய் சட்டர்ஜி என்பவரின் மனுவை பரிசீலித்தபோது, அவரது குற்றத்தின் தீவிரம் கருதி, அவருக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என, உறுதியாக நினைத்தேன்''என்று கூறியுள்ளார்.