ஜப்பான் வரலாற்றை பறைசாற்றும் அஞ்சல் தலை கண்காட்சி
ஜப்பான் நாட்டில் கலை, கலாசாரம் மற்றும் வரலாற்றை பறைசாற்றும் வகையிலான அஞ்சல் தலை கண்காட்சி சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் அமைந்துள்ள ஏபிகே ஏஓடிஎஸ் தோசாகாய் தமிழக மையத்தில் நடக்கும் இக்கண்காட்சியை சென்னயில் உள்ள ஜப்பான் துணைத் தூதர் மசானோரி நகானோ தொடங்கி வைத்தார். இக்கண்காட்சி சனி (ஜூன்30) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 1) வரை நடைபெற உள்ளது.
கண்காட்சி தொடக்க விழாவில் ஜப்பான் துணைத் தூதர் நகானோ பேசியது: இந்தியா ஜப்பான் இடையேயான நல்லுறவு 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள வேளையில் இந்த அஞ்சல் தலை கண்காட்சி நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஏபிகே ஏஓடிஎஸ் தோசாகாய் தமிழக மையம் அஞ்சல் தலை கண்காட்சியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜப்பான் நாட்டின் அஞ்சல் தலைகள் விளக்கங்களுடன் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஜப்பானின் கலை, கலாச்சாரம் மற்றும் வரலாற்றை அறிந்து கொள்ள இக்கண்காட்சி சென்னை மக்களுக்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்றார்.
தொடக்க விழாவில் ஓய்வு பெற்ற அஞ்சல் துறை துணைத் தலைவர் எஸ்.பாலசுந்தரம், அஞ்சல் தலை சேகரிப்போர் சங்கத் தலைவர் ஜி.பாலகிருஷ்ணதாஸ், ஏபிகே ஏஓடிஎஸ் தோசாகாய் தமிழக மைய தலைவர் ரங்கநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.