இரண்டு செட் துணிகளுடன் வர வேண்டும் : திமுக மறியல் போராட்டத்திற்கு அழைப்பு
தமிழக அரசு, பழிவாங்கும் எண்ணத்துடன், தி.மு.க., நிர்வாகிகளை, குண்டர் சட்டத்தில் கைது செய்கிறது' என, புகார் கூறி, தி.மு.க., சார்பில், ஜூலை 4ம் தேதி, மாநில அளவில் மாவட்ட, நகர, ஒன்றியங்களில், சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கோவை, கணேசபுரத்தில், அன்னூர் ஒன்றிய ஊழியர் கூட்டம் நடந்தது. மாவட்டச் செயலர் பொங்கலூர் பழனிச்சாமி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மாவட்ட நிர்வாகிகள் பேசியபோது, ‘’இந்த மறியல் போராட்டத்தில், கிளை, நகர, ஒன்றிய நிர்வாகிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும். பங்கேற்க உள்ளோர் தங்கள் பெயர், முகவரி, மொபைல் எண்ணுடன், படிவத்தில் கையெழுத்திட்டு, 30ம் தேதிக்குள், மாவட்ட அலுவலகத்தில் தர வேண்டும். அன்னூர் ஒன்றியத்தில் குறைந்தது, 300 பேராவது, மறியலில் ஈடுபட வேண்டும். மறியலுக்கு வருவோர், "இரண்டு செட்' துணிகளுடன், சிறைக்கு செல்ல தயாராக வர வேண்டும். மொபைல் போன், கொண்டு வரக்கூடாது. போலீசார் முன்னெச்சரிக்கையாக, கைது செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே, மறியலுக்கு ஒருநாள் முன்னதாகவே, வேறு இடங்களுக்கு சென்றுவிட்டு, மறியல் நேரத்தில், மறியல் இடத்திற்கு வந்து விட வேண்டும்’’என்று கூறினார்.