பிரபல நடிகர் வீட்டில் யானைத்தந்தம் : வனத்துறைக்கு நோட்டீஸ்
பிரபல நடிகர் மோகன்லால் வீட்டில், சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் யானை தந்தங்கள் குறித்து, புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுகுறித்து விளக்கமளிக்க கேரள வனத்துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
மலையாளம், தமிழ் உட்பட ஏராளமான திரைப் படங்களில் நடித்தவர் பிரபல நடிகர் மோகன்லால். இவருக்குச் சொந்தமான, சென்னை, கொச்சி, திருவனந்தபுரம், பெங்களூரு போன்ற இடங்களில் உள்ள வீடுகள், அலுவலகங்களில், கடந்த 2011ம் ஆண்டு, ஜூலை மாதம், வருமான வரித்துறையினர், ஒரே நாளில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில், கேரளா கொச்சி அருகே, தேவரா என்ற இடத்தில் உள்ள மோகன்லால் வீட்டில் நடந்த சோத னையில், அங்கிருந்த இரு யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. பின், அவற்றை வருமான வரித் துறையினர், வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அது, உண்மையான யானை தந்தங்கள் தானா என்பது குறித்து, வனத்துறையினர் முதலில் பரிசோதித்தனர்.
அது, உண்மையான தந்தங்கள் தான் என்பது கண்டறியப்பட்டதும், அவர் மீது, மாநில வனத்துறை அதிகாரிகள், வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், நடிகர் மோகன்லால், இதுகுறித்து விளக்கம் அளிக்க, எர்ணாகுளம் மாவட்டம், பெரும்பாவூர் அருகே உள்ள, கோடநாடு வனத்துறை அலுவலகத்திற்கு வருமாறு, நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்து, நடிகர் மோகன்லால், வனத்துறை அலுவலகத்திற்குச் சென்று, யானை தந்தங்கள் தனக்கு எப்படி கிடைத்தன என்பது குறித்த பல்வேறு ஆவணங்களை, அதிகாரிகளிடம் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், பெரும்பாவூர் முதல் வகுப்பு நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஐசக் வர்கீஸ் என்பவர் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், "நடிகர் மோகன்லால் வீட்டில் இருந்த யானை தந்தங்களை கைப்பற்றாமல், வனத்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி, அறிக்கை தயாரித்துள்ளனர். இது வன விலங்கு பாதுகாப்பு சட்டத்திற்கு எதிரானது.
எனவே, இதுகுறித்து விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட், இதுகுறித்து விளக்கமளிக்க கோடநாடு வனத்துறை அதிகாரிக்கு, "நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டார். இந்த மனு மீதான அடுத்த விசாரணை, அடுத்த மாதம் 16ம் தேதிக்கு, ஒத்தி வைக்கப்பட்டது.