ஆணுறைகளால் அழியும் அரியவகை ஆமைகள்!பெண் விஞ்ஞானி அதிர்ச்சி தகவல்!
கடலில் மிதக்கும் ஆணுறைகளால் அரியவகை ஆமைகள் முற்றிலுமாக அழிந்துவிட்டது என்று இந்திய கடல் ஆராய்ச்சி பெண் விஞ்ஞானி அனிதா ஜார்ஜ் அதிர்ச்சி அளிக்கும் தகவல் தெரிவித்தார்.
முதுகில் சிலிண்டர், முகத்தில் மாஸ்க் போட்டுக்கொண்டு ஆழ்கடலில் ஆராய்ச்சி செய்யும் சவாலான பணியில் ஈடுபட்டு வரும் பெண் கடல் ஆராய்ச்சியாளர் அனிதா ஜார்ஜ். இவரது சொந்த ஊர் நாகர்கோவில்.
இந்தியாவின் முதல் பெண் கடல் ஆராய்ச்சியாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ள இவர் கூறியதாவது:
இறைவன் நமக்கு அளித்துள்ள கடலில் இயற்கை வளங்கள் கொட்டிக்கிடக்கின்றன. கடலில் லட்சக்கணக்கான உயிரினங்கள் வாழ்கின்றன. இவற்றில் மீன்களை மட்டுமே நாம் அதிகம் பயன்படுத்துகிறோம். மீதமுள்ள வளங்களை பயன்படுத்துவதில்லை. கடலில் பவளப்பாறைகளில்தான் மீன்கள் அதிகம் வாழ்கின்றன.
துறைமுகத்திற்கு வரும் கப்பல்களில் இருந்து கொட்டப்படும் கழிவுகள், மீனவர்கள் வீசி எறியும் வலைகள், தொழிற்சாலை கழிவுகள் போன்ற பல காரணங்களால் பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. சுனாமி வருவதற்கு முன்பும், வந்த பின்னும் கடலில் அகழ் ஆராய்ச்சி செய்தபோது பவள பாறைகள் பெருமளவு சேதமடைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பவளப்பாறை அதிகம் காணப்பட்ட சிதம்பரம் பிச்சாவரம் பகுதியில் சுனாமி பாதிப்பு அதிகமில்லை. அப்பகுதியில் மாங்குரோவ் காடுகளும், பவளப்பாறைகளும் அதிகம் இருப்பதே அதற்கு காரணம்.
மிக்சி, கிரைண்டரைக்கூட கடலில் போடுகிறார்கள். ஆணுறைகளும் (காண்டம்) கடலுக்குள் கிடக்கின்றன. ஆணுறைகளை, சில அரியவகை ஆமைகள் மீன்கள் என்று தவறாக நினைத்து சாப்பிட்டுவிடுகின்றன. இதனால் அந்த இனம் அழிந்து வருகிறது. இது, மிகவும் சோகத்திலும் சோகமாக உள்ளது.
லட்சத்தீவில் பிளாஸ்டிக் உள்பட கண்ட பொருட்களைக் கொட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் அந்த கடல்பகுதி மாசு இல்லாமல் பளிச்சென்று இருக்கிறது. கடல் ஆராய்ச்சிக்கு இந்த பகுதி மிகவும் ஏற்ற இடமாகும்.
அதேபோல் தாய்லாந்து, ஹாங்காங் கடல் பகுதியில் கடல் விசிறியும், கடல் குச்சியும், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ஓமன் கடல், அரேபியன் கடல் பகுதியில் அபூர்வ வகை பவளப்பாறைகளும் உள்ளன. கடலுக்கு அடியில் மீன்கள், பிற உயிரினங்களின் பயணம், செடிகள், பாசிகள் அடங்கிய தோட்டங்களை காண கண்கோடி வேண்டும்.
இயற்கை வளங்கள் கொட்டிக்கிடக்கும் கடலை, மாசுபடுத்துவதை உடனே நிறுத்த வேண்டும். பவளப்பாறைகளை அழித்தால் மீன்வளம் மட்டுமல்லாமல் மனித இனமே அழியும் அபாயம் ஏற்படும். கடல் வளத்தை காப்பது நமது ஒவ்வொருவரின் கடமை ஆகும். இவ்வாறு அனிதா ஜார்ஜ் கூறினார்.