சொத்துகுவிப்பு வழக்கு! நீதிபதிக்கு எதிராக ஜெயலலிதா புது மனு!
சொத்துகுவிப்பு வழக்கில் இன்று (25.06.2012) நடந்த விசாரணையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஆஜராகவில்லை. மேலும் இவர்கள் தரப்பில் நீதிபதி மல்லிகார்ஜூனையா நியமனம் செல்லாது என கோரி புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துகுவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு கோர்டில் நடந்து வருகிறது. சிறப்பு கோர்ட் நீதிபதி மல்லிகார்ஜூனையா விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் ஏற்கனவே முதல்வர் ஜெ. ஆஜராகி, பல கேள்விகளுக்கு நீதிபதி மல்லிகார்ஜூனையா முன் பதில் அளித்துள்ளார்.
சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோரிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சிலநாட்களுக்குமுன் கோர்டில் சசிகலா தாக்கல் செய்த மனுவில் தனக்கு கண் அறுவை சிகிச்சை செய்துள்ளதால் ஓய்வு கோரியும், கோர்ட்டில் ஆஜராவாதிலிருந்து விலக்கு கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் இன்று (25.06.2012) நடந்த விசாரணையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் நீதிபதியாக உள்ள மல்லிகார்ஜூனையா நியமனம் செல்லாது எனவும், அவரிடம் அளித்துள்ள பதில்கள் அனைத்தும் செல்லாதது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் நீதிபதி மல்லிகார்ஜூனையாவுக்கு முன்பு பட்சாபுரா என்பவர் நீதிபதியாக இருந்தார். அவர் ஓய்வு பெற்றப்பின் பதவி உயர்வு மூலம் மல்லிகார்ஜூனையா நீதிபதியாக நியமிக்கப்படவில்லை. அவர் சிறப்பு கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டதாக இதுவரை உறுதியாக தெரிவிக்கப்படவில்லை என கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி மல்லிகார்ஜூனையா, விசாரணையை ஜூலை 3 ம் தேதி தள்ளி வைத்தார்.