சோனியாகாந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்!
தற்போதைய ஜனாதிபதி பிரதீபா பட்டீலின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால் அவருக்கு பதிலாக புதிய ஜனாதிபதியை தேர்ந்து எடுக்க அடுத்த மாதம் 19 ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் தற்போதைய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி போட்டியிடுகிறார்.
அவருக்கு பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிவசேனா, ஐக்கிய ஜனதாதளம் கட்சிகளும், மார்க்சிஸ்ட் கம்ழூனிஸ்டு, பார்வர்டு பிளாக் ஆகிய இடதுசாரி கட்சிகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன.
பிரணாப் முகர்ஜியை எதிர்த்து பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா போட்டியிடுகிறார். அ.தி.மு.க. மற்றும் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதாதளம் கட்சிகளால் முன்நிறுத்தப்பட்ட பி.ஏ.சங்மாவை தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரிக்கிறது.
இதனால் தேர்தலில் நேரடி போட்டி ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் தலைமையில் டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.
இதில் காரிய கமிட்டி உறுப்பினரான பிரணாப் முகர்ஜியும் கலந்து கொள்கிறார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதால் அவர், நிதி மந்திரி பதவியை நாளை (செவ்வாய்க்கிழமை) ராஜினாமா செய்கிறார். இதேபோல் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் அவர் ராஜினாமா செய்ய இருக்கிறார். எனவே அவர் கலந்து கொள்ளும் கடைசி காரிய கமிட்டி கூட்டம் இதுவாகத்தான் இருக்கும். எனவே இந்த கூட்டத்தில் பிரணாப் முகர்ஜிக்கு பிரிவுபசார விழா நடத்தப்படுகிறது. மேலும், காரிய கமிட்டி உறுப்பினராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து அவர் ஆற்றிய சேவையை பாராட்டி, தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
காரிய கமிட்டி கூட்டத்தில், ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கட்சி மேற்கொள்ள வேண்டிய உத்திகள் பற்றியும், பிரணாப் முகர்ஜியை வெற்றி பெறச் செய்வது பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது. மம்தா பானர்ஜியின் ஆதரவை பெறுவது பற்றியும், இதுவரை முடிவு செய்யாத கட்சிகளின் ஆதரவை கேட்டு பெறுவது பற்றியும் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்கள்.