ஒடிசாவை சேர்ந்த 18 குழந்தைகள் மீட்பு
நாகர்கோவிலில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த காப்பகத்தில் இருந்து ஓடிசா மாநிலத்தை சேர்ந்த 18 குழந்தைகள் மீட்கப்பட்டனர். அவர்களை கொண்டு வந்த கிறிஸ்துவ பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறையை சேர்ந்த பாதிரியார் கிளாரட் என்பவர், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தில் இருந்து 5 முதல் 10 வயதுக்குட்பட்ட 15 ஆண், 3 பெண் என 18 குழந்தைகளை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அழைத்து வந்துள்ளார்.
பாதிரியார் காப்பகம் நடத்த இருந்த இடத்தில் கட்டட பணிகள் நிறைவடையாததால் குலசேகரத்தை அடுத்துள்ள மாஞ்சகோணத்தில் சமூக நல கூடத்தில் அந்த குழந்தைகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அனுமதியின்றி இங்கு குழந்தைகள் தங்க வைக்கப்பட்டு இருப்பது குறித்து அறிந்த கலெக்டர் நாகராஜன் உத்தரவின் பேரில் போலீசார் அவர்களை மீட்டனர்.
தற்போது திருநெல்வேலி மாவட்டம் சரணாலயம் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் குறித்து ஒடிசா மாநிலத்தில் உள்ள பெற்றோர்களிடம் தெரிவிக்கப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிறிஸ்துவ பாதிரியார் கிளாரட் கைது செய்யப்பட்டு குழந்தைகளின் வருகை குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.