ஈழத் தமிழர்களை கைதூக்கி நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் டெசோ அமைப்பை உருவாக்கினோம்: கலைஞர்
அதிமுக அரசை கண்டித்து வடசென்னை மாவட்ட திமுக சார்பில் சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் 22.06.2012 அன்று பொதுக்கூட்டடம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் கலைஞர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில்,
இலங்கையில் போர் முடிந்துவிட்டது. போராடிய விடுதலை புலிகள் ஒழிக்கப்பட்டு விட்டார்கள் என்று சொல்லப்பட்டாலும், இன்னமும் அந்த காயம் முழுமையாக ஆறவில்லை. இலங்கையில் தமிழ் ஈழம் விடுதலைக்காக குரல் கொடுக்க தொடங்கி 50 ஆண்டுகள் ஆகிறது. இலங்கையில் ஈழத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக, அவர்களுக்கு அமைதியான வாழ்வு அமைவதற்காக, அவர்களின் உரிமை காப்பாற்றப்பட நாங்களும் குரல் கொடுக்கிறோம்.
இளைஞர்கள் வெகுண்டெழுந்து ஆயுதப் போராட்டம் நடத்தினார்கள். ஆயுதப் போராட்டம் எப்போதும் வெற்றியை தராது. அதில் வெற்றி கிடைக்கவில்லை. ஈழத் தமிழர்களை அடிமையாக்கி, பெண்களை தனிமைப்படுத்தி அட்டூழியங்கள் தொடர்ந்தன. 2 முறை இலங்கை தமிழர்களை காக்க ஆட்சியை இழந்தோம். ஒரு முறை இலங்கை செல்லும் அமைதிப்படை தமிழகம் வந்தபோது, அதை வரவேற்க முடியாது என்றேன்.
அதன் பிறகு வீழ்ந்த ஈழத் தமிழர்களை கைதூக்கி நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் டெசோ அமைப்பை உருவாக்கினோம். இப்போதும் அதை தொடங்கி, அதன் மாநாடு விழுப்புரத்தில் ஆகஸ்டு 5ந் தேதி நடக்க இருக்கிறது. இத்தனை பணியையும் நாம் திறமையாக செய்து முடிக்க வேண்டும். உங்களை நம்பித்தான் இதை தொடங்கியுள்ளேன். அப்போதுதான் திராவிட இயக்கத்தின் நோக்கம் நிறைவேறும்.
திராவிட கழகத்தில் இருந்து வெளியேறி திராவிட முன்னேற்ற கழகத்தை அண்ணா தொடங்கினாலும், இரட்டைக்குழல் துப்பாக்கியாக இரண்டும் செயல்படும். இலங்கை தமிழர்கள் எப்படி எல்லாம் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற செய்தி வெளிவருகிறது. அதை தடுத்து நிறுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும். அதற்கு டெசோ மாநாடு பயன்படும். இதில், வடநாட்டு அறிஞர்கள், தமிழக அரசியல் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இவ்வாறு தி.மு.க. தலைவர் பேசினார்.