ஜெயலலிதா கோடநாடு சென்றார்
முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று கோடநாடு சென்றார். வழி நெடுகிலும் அவருக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
கடந்த சட்டமன்ற கூட்டத்தொடர் முழுவதும் கலந்து கொண்டு தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். சில தினங்களுக்கு முன்பு சென்னையில் 1006 ஜோடிகளுக்கு திருமணமும் நடத்தி வைத்தார்.
இந்த நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா கோடநாடு செல்வதாகவும், அங்கிருந்தபடியே அவர் அரசு பணிகளை கவனிப்பார் என்றும் தமிழக அரசு தெரிவித்தது.
அதன்படி, முதலமைச்சர் ஜெயலலிதா கோடநாடு செல்வதற்காக நேற்று காலை தனது போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையம் சென்றார். விமான நிலையத்தில் அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும், தொண்டர்களும் திரளாக நின்று வரவேற்றனர்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் காலை 11.30 மணிக்கு ஜெயலலிதா கோவை விமான நிலையம் வந்தார். அவரை கோவை மாவட்ட கலெக்டர் எம்.கருணாகரன் மற்றும் அதிகாரிகள் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து அமைச்சர்கள் செ.தாமோதரன், எம்.எஸ்.எம்.ஆனந்தன் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.
வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் பின்னர் கோவை விமான நிலையத்திலிருந்து காலை 11.35 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கோடநாடு புறப்பட்டார். கோடநாடு எஸ்டேட்டில் அமைக்கப்பட்டு இருந்த ஹெலிகாப்டர் தளத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா காலை 11.55 மணிக்கு வந்து இறங்கியதும், அவருக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், டி.ஐ.ஜி.ஜெயராம், நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு நிஜாமுதீன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அதன் பின்னர் முதலமைச்சர் ஜெயலலிதா கார் மூலம் கோடநாடு இல்லத்துக்கு சென்றார். நுழைவு வாயிலில் அவருக்கு அ.தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். செண்டை மேளம் முழங்க, காவடியாட்டம், படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனம், பழங்குடியின மக்களின் நடனம் போன்றவற்றுடனும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதலமைச்சர் ஜெயலலிதா வருகையை முன்னிட்டு கோடநாடு பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.