கேரளாவுக்கு செல்வதற்கான சாலைகள் அனைத்தையும் மூட வேண்டும்: ராமதாஸ்
பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முல்லைப் பெரியாற்றின் குறுக்கே தற்போதுள்ள அணையை எப்படியாவது செயலிழக்க செய்து, புதிய அணை கட்டவேண்டும் என்பதில் கேரள அரசு பிடிவாதமாக உள்ளது. அணையை ஆய்வு செய்த உச்சநீதிமன்றக் குழு அணை வலிமையாக இருப்பதாக கூறிவிட்டதால், புதிய அணை கட்டும் திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தற்போது, அணையின் உறுதித் தன்மையை கண்டறிய போடப்பட்ட 6 துளைகளில் 4 துளைகள் அடைக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 2 துளைகளை அடைக்க தமிழக அரசு அனுப்பிய சிமெண்ட் மூட்டைகளை கொண்டு செல்லவிடாமல், வனத்துறை மூலம் கேரள அரசு தடுத்து வருகிறது.
இந்த நிலை தொடர்ந்தால், கேரள அரசுக்கு பாடம் புகட்டும் வகையில், தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு அரிசி, பால், காய்கறி உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்வதற்கான சாலைகள் அனைத்தையும் மூடி பொருளாதார முற்றுகையை செயல்படுத்த தமிழக அரசு முன்வரவேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.