நித்தி பிடியில் உள்ள மகனை மீட்கக்கோரி பெற்றோர் மனு! மதுரை ஆதின மடத்தில் போலீஸ் சோதனை!
தஞ்சாவூரை அடுத்த ஒரத்தநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி - பூர்ணம் தம்பதியினர். இவர்கள் இன்று (13.06.2012) காலை மதுரை போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, எங்கள் இளைய மகன் ராகவனை மதுரை ஆதின மடத்தில் நித்தியானந்தா சீடர்கள் அடைத்து வைத்துள்ளனர். ராகவனை தொடர்பு கொண்டு நாங்கள், மதுரை ஆதின மடத்திற்குள் சென்று அவனை மீட்க முயன்றபோது, நித்தியானந்தா ஆட்கள் எங்களை உள்ளே விடாமல் தடுத்து மிரட்டுகின்றனர். கடந்த ஒரு வாரமாக நாங்கள் ராகவமனை திருவண்ணாமலை மற்றும் பெங்களூரு அருகில் உள்ள பிடதியில் தேடி அலைந்தோம். மதுரை ஆதின மடத்தில் ராகவமனை அடைத்து வைத்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் நாங்கள் மதுரை ஆதின மடத்திற்கு நேரில் வந்து அழைத்துச் செல்ல முற்பட்டபோது, மதுரை ஆதினமும், நித்தியானந்தா சீடர்களும் எங்களை மிரட்டி வெளியே துரத்தினர். என் மகன் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என பயம் உள்ளது. சட்டவிரோதமாகவும் அடைத்து வைத்துள்ளனர். அவனை மீட்டு எங்களிடம் ஒப்படைக்குமாறு மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இதையடுத்து மதுரை போலீஸ் கமிஷனர், அருகில் உள்ள விளக்குத்தூண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேலை அழைத்து இந்த மனு மீது விசாதணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
விளக்குத்தூண் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கதிர்வேல் தலைமையிலான போலீசார், மதுரை ஆதின மடத்திற்குள் நுழைந்து, ராகவனை மீட்க பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆதினத்திடம் சட்டவிரோதமாக யாரையும் அடைத்து வைக்கக் கூடாது என்று எச்சரித்தனர்.