நெல்லை அருகே நாட்டு வெடிகுண்டு வீச்சு!
நெல்லை மாவட்டத்தின் கூடங்குளம் அருகே உள்ள கடற்கரை கிராமம் கூத்தங்குழி. இங்கே தனியார் பள்ளிகளும் அரசுப் பள்ளிகளும் உள்ளன. தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்த நிலையில், கூத்தங்குழி வாசிகள் சிலர், தங்களது குழந்தைகளை படிப்பிற்காக வெளியிடங்களுக்கு அனுப்பியுள்ளனர்.
இதனை உள்ளூரில் உள்ள சிலர், தட்டிக்கேட்டனர். உள்ளூரில் உள்ள பள்ளிகளுக்குத்தான் குழந்தைகளை அனுப்ப வேண்டும். வெளியூர்களுக்கு குழந்தைகளை அனுப்பக் கூடாது என்று ஒரு தரப்பும், வெளியூர்களுக்குதான் குழந்தைகளை அனுப்புவோம் என்று மற்றொரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து ஊரில் சமாதானம் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் வெளியூர்களுக்கு குழந்தைகளை அனுப்பக் கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதனையும் மீறி இரண்டு பேர் தங்களது பிள்ளைகளை வெளியூர்களுக்கு அனுப்பினர்.
இதனால் விவகாரம் முற்றியது. இதையடுத்து ஒருவர் மன்னிப்பு கேட்கவே, மற்றொருவர் எதிர்த்திருக்கிறார். இதனிடையே இன்று (13.06.2012) அதிகாலை இரண்டு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்படவே நாட்டு வெடிகுண்டு வீச்சு நடைபெற்றது.
இதில் பொதுசொத்துக்கும் சேதமில்லை, யாருக்கும் காயமும் ஏற்படவில்லை. குண்டு வீச்சு சம்பவத்தால் கிராமத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.