புதுக்கோட்டை தொகுதியில் இன்று வாக்குப்பதிவு: 15ந் தேதி வாக்கு எண்ணிக்கை
புதுக்கோட்டை எம்.எல்.ஏ.வாக இருந்த முத்துக்குமரன் கடந்த ஏப்ரல் மாதம் 1 ந் தேதி சாலை விபத்தில் மரணமடைந்தார். இதையடுத்து புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திக்தொண்டைமான், தே.மு.தி.க. வேட்பாளர் ஜாகீர்உசேன், இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் சீனிவாசன் உள்பட 20 பேர் போட்டியிடுகின்றனர்.
இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
புதுக்கோட்டை தொகுதியில் 97 ஆயிரத்து 371 ஆண்கள், 97 ஆயிரத்து 604 பெண்கள் மற்றும் இதர வாக்காளர்கள் 5 பேர் என மொத்தம் 1 லட்சத்து 94 ஆயிரத்து 980 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிப்பதற்காக 224 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவிற்கு 224 மற்றும் 12 சதவீதம் கூடுதல் ஒதுக்கீடு என மொத்தம் 251 கட்டுப்பாட்டு எந்திரங்கள் மற்றும் 502 வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் செய்யப்பட்டு இருந்தன. இவை உள்பட வாக்குப்பதிவு தொடர்பான 108 பொருட்களும் தயார் செய்யப்பட்டு தாசில்தார் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தன. இந்த பொருட்களை வாக்குச் சாவடிகளுக்கு கொண்டு செல்லும் பணி நேற்று நடந்தது.
வாக்குச்சாவடிகள் 19 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு தலா ஒரு அலுவலர் வீதமும், 169 வாக்குசாவடி தலைமை அலுவலர்களும், 1,095 வாக்குப்பதிவு அலுவலர்களும் வாக்குப்பதிவு தொடர்பான பணிகளில் ஈடுபடுகின்றனர்.
அனைத்து வாக்கு சாவடிகளிலும் வாக்குப்பதிவு நேரடியாக (ஆன் லைன்) வீடியோ பதிவு செய்யப்பட உள்ளது. வாக்குப்பதிவை மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோநுயூ நேரடியாக ஆன்லைன் மூலமாக கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தனியே வீடியோ கேமராக்கள், லேப் டாப் கருவிகள் அனைத்து வாக்கு சாவடிகளிலும் பொருத்தப்பட்டு உள்ளது.
போட்டோ வாக்காளர் அடையாள அட்டை அல்லது அடையாள சீட்டை பயன்படுத்தி மட்டுமே வாக்களிக்க முடியும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வாக்குப்பதிவையொட்டி புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் தலைமையில் புதுக்கோட்டை மற்றும் பிற மாவட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர், தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படையினர், துணை ராணுவ படையினர் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தம் 3 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
வாக்குப்பதிவு முடிந்ததும் மாலையிலேயே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்லப்படும். அங்கும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
15 ந் தேதியன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.