புதிய தலைமை செயலகத்தில் மருத்துவமனை அமைக்க விதிக்கப்பட்ட தடையை தற்போது நீக்க மறுப்பு
சென்னை ஓமந்தூரார் எஸ்டேட்டில் ரூ.1,092 கோடி செலவில் புதிய தலைமை செயலகம் கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்டது. ஆனால், அதிமுக அரசு பொறுப்பேற்றதும் புதிய தலைமை செயல கத்தை பயன்படுத்தவில்லை. அந்த இடத்தில் புதிய மருத்துவமனை உருவாக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இதை எதிர்த்து சென்னையை சேர்ந்த வக்கீல் வீரமணி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு குறித்து அரசு அளித்த பதிலை பரிசீலனை செய்த நீதிபதிகள் டி.முருகேசன், ஜனாத் தனராஜா, ‘மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி வாங்காமல் தலைமை செயலகத்தை மருத் துவம னையாக மாற்ற கூடாது என்று தடை விதித்து உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் டி.முருகேசன், கே.கே.சசிதரன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் நவனீத கிருஷ்ணன் ஆஜராகி, மாநில சுற்றுச்சூழல் பாதிப்புகளை மதிப்பீடு செய்யும் ஆணையத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் வாங்கிவிட்டோம். எனவே இந்த வழக்கில் விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்’ என்றார்.
உடனே மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, ‘ஒரு முறை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற்ற பிறகு மீண்டும் ஒரு முறை தடையில்லா சான்றிதழ் பெற சட்டத்தில் இடம் இல்லை. எனவே மனுவில் நாங்கள் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் அரசு பதில் அளிக்க வேண்டும். அதன் பிறகு தடையை நீக்கவேண்டும்’ என்றார்.
இதை கேட்ட நீதிபதிகள், மனுதாரர்கள் மனுவில் எழுப்பிய கேள்விகளுக்கு அரசு முழுவதும் பதில் அளிக்க வேண்டும். அதன் பிறகுதான் தடையை நீக்குவது குறித்து தீர விசாரித்து முடிவு அறிவிக்கப்படும். எனவே வழக்கில் விதிக்கப்பட்ட தடையை தற்போது நீக்க முடியாது. வரும் 20ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைக்கிறோம், அன்றைக்கு அரசு விரிவாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.