பொய்யை பரப்புகிறார்கள்: மன்மோகன் சிங் வேதனை
நமக்கு எதிரானவர்கள் கறுப்பு பணம், ஊழல் பற்றி நம்ப முடியாத தகவல்களை பரப்புகிறார்கள் என்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
டெல்லியில் நேற்று நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ஒரே தடவையில் கொண்டு வந்து சேர்க்க வேண்டிய கறுப்பு பணம் என்று தினந்தோறும் ஒரு எண்ணிலடங்கா தொகை கூறப்படுகிறது. இதை நாம் கேட்டு வருகிறோம். நமக்கு எதிரான பல்வேறு, நம்பத்தகாத நபர்களால் பொய்யான, தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இதை கட்சி தலைவர்கள், தொண்டர்கள் சேர்ந்து வலுவான வகையில் எதிர்த்து போராட வேண்டும். அனைத்து தலைவர்களும், தொண்டர்களும் இந்த பொய், தவறான தகவல்கள் குறித்து மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும்.
அரசு நிர்வாகத்தில் உள்ளவர்கள் (மந்திரிகள்) மோசடி செய்ததாக கூறப்படுகிற தொகைகள் நம்ப முடியாத அளவுக்கு உள்ளது. உண்மைக்கு அப்பால் எதுவுமே இருக்கக்கூடாது.
பொது வாழ்வில் ஊழலை ஒழிக்கவும், அரசு அதிகாரிகளை பொறுத்தமட்டில் நிர்வாகத்தில் ஒளிவுமறைவற்ற தன்மை, பொறுப்பு ஏற்கும் நிலை ஆகியவற்றை கொண்டு வரவும் அரசு உறுதி பூண்டுள்ளது என்பதுதான் உண்மை நிலை.
காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள், திட்டங்கள், வாக்குறுதிகள் அனைத்துமே சாதாரண மக்களின் நலனை மையமாக வைத்துத்தான் அமைந்துள்ளன. காங்கிரஸ் கட்சியால்தான் நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்து செல்ல முடியும். இதனால் வளர்ச்சியின் பலனை ஒவ்வொரு குடிமகனும் அனுபவிக்க முடியும். சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் காங்கிரஸ் கட்சி மட்டுமே அரவணைத்து செல்ல இயலும்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவி ஏற்பதற்கு முன்பு இருந்ததை விட தற்போது வறுமை வேகமாக குறைந்து வருகிறது. தினக்கூலி உயர்ந்து வருகிறது. விவசாயத்துறை வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. பொருளாதார பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சாமானிய மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எல்லா முயற்சிகளையும் அரசு செய்கிறது.
உள்நாட்டு பாதுகாப்பு, ராணுவம், தொலை தொடர்பு, கல்வி, சமூக நலம், சுகாதாரத்துறைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றிருக்கிறோம். அதே நேரத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாவட்டங்கள் பிரச்சினைக்குரிய பகுதிகளாகவே நீடிக்கின்றன.
உலகளவில் பொருளாதார மந்த நிலைக்கு மத்தியிலும், இந்தியா 2011 12 ஆண்டில் 7 சதவீத வளர்ச்சி கண்டிருக்கிறது. இது உலகின் அதிகபட்ச வளர்ச்சிவீதத்தில் ஒன்று.
உலக பொருளாதாரத்தில் நிச்சயமற்ற நிலைமை உள்ளது. மேற்கு ஆசியாவில் நிச்சயமற்ற தன்மையால் கச்சா எண்ணெய் விலை போலவே பிற விலைகளும் உயர்ந்து வருகின்றன. இதெல்லாம் அரசுக்கு சவாலாக அமைந்துள்ளன.
இது நாட்டுக்கும், நமது பொருளாதாரத்துக்கும் கடினமான நேரம். இது பெரும்பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை சிறிதளவே கட்டுப்படுத்த முடிகிறது. நமது நம்பிக்கை, உறுதி இரண்டுக்கும் சோதனையான நேரம். நாம் நம்மில் நம்பிக்கை வைத்து சமாளிக்க வேண்டும். இந்த சோதனையான காலக்கட்டத்தை கடந்து நாம் வலுவான சக்தியாக உருவெடுப்போம்.
இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.