திமுக,அதிமுகவின் போராட்டம் : ராமதாஸ் தாக்கு
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பா.ம.க. சார்பில் சென்னை மெமோரியல் ஹால் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தின் போது டாக்டர் ராமதாஸ், ’’ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவி ஏற்ற 3 ஆண்டுகளில் 18 முறை பெட்ரோல் விலையை உயர்த்தி உள்ளது. ஒரு ஆண்டில் மட்டும் 6 முறை உயர்த்தி இருக்கிறார்கள். எண்ணை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக காரணம் காட்டுவது மக்களை திசை திருப்பும் செயல். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை லிட்டர் ரூ.34 ஆக உள்ளது. அண்டைநாடான பாகிஸ்தானில் 1 லிட்டர் பெட்ரோல் விலை 35 ரூபாய், நேபாளத்தில் லிட்டர் ரூ.39, வங்காள தேசத்தில் ரூ.29, இலங்கையில் ரூ.21 ஆக விற்கப்படுகிறது. கூட்டணி கட்சிகளான தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி ஆகியவை பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது ஏமாற்று வேலை. அ.தி.மு.க. அரசும் கோடிக் கணக்கில் வரியை உயர்த்தி விட்டு போராட்டம் நடத்துகிறது. பெட்ரோலில் எத்தனால் கலந்தால் விலை குறையும். கரும்பு உற்பத்தியில் தமிழ்நாடு 6-வது இடத்தில் இருந்தும் எத்தனால் எரிபொருள் உற்பத்தி செய்யப்படவில்லை. அனைத்தும் சாராய ஆலைகளுக்கு சென்று விடுவதுதான் இதற்கான காரணம். பெட்ரோலில் எத்தனால் கலப்பதை கட்டாயமாக்க வேண்டும். எண்ணை நிறுவனங்களில் நடக்கும் ஊழல்கள், அதிகாரிகளுக்கு வழங்கப்படும் கூடுதல் சலுகைகள் போன்றவற்றை சரி செய்தாலே விலையை குறைக்கலாம். சென்னையில் எண்ணை நிறுவன உயர் அதிகாரி ஒருவருக்கு போனசாக மட்டும் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் கொடுக்கிறார்கள். மாநில அரசு பெட்ரோல் மீதான வரியை குறைக்க வேண்டும். மத்திய அரசு விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்’’என்று பேசினார்.