அங்கன்வாடி பணியாளர் நியமனம் விண்ணப்பிக்க 12ம்தேதி கடைசிநாள்
வேலூர் கலெக்டர் அஜய் யாதவ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘’வேலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 587 அங்கன்வாடி பணியாளர், 37 குறுமைய அங்கன்வாடி பணியாளர் மற்றும் 749 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் இன சுழற்சி முறையில் மட்டுமே நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது.
நேரடி நியமனம் நடைபெற உள்ள, இனசுழற்சி முறையில் ஒதுக்கப்பட்டுள்ள மைய பெயர் பட்டியல் சம்பந்தப்பட்ட குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலக விளம்பர பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. இனசுழற்சி முறையில் மட்டுமே நியமனம் நடப்பதால், காலி பணியிடம் உள்ள மையத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இனத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பப் படிவம் சம்பந்தப்பட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலக விளம்பர பலகை யில் உள்ள மாதிரி விண்ணப்பத்தில் உள்ளவாறு தயார் செய்து, அதில் உள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். அதனுடன், பிறந்த தேதி, கல்வித்தகுதி, சாதி சான்று, இருப்பிட சான்று, ரேஷன் அட்டை நகல், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை நகல், வரி ரசீது, விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர் எனில் அதற்குரிய சான்று, மாற்றுத்திறனாளி என்றால் அதற்கான சான்று மற்றும் விண்ணப்பத்தில் உள்ள பிற சான்றுகளுடன் சம்பந்தப்பட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் வரும் 12ம்தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
காலி பணியிட விவரம், மாதிரி விண்ணப்பப்படிவம், பணி நியமனத்துக்கான விதிமுறைகள் ஆகியவற்றை என்ற இணையதளம் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம். இப்பணியிடங்களுக்கு ஏற்கனவே ஜனவரி&11ல் நடைபெற்ற நேர்முகத்தேர்வு நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டு விட்டன. விரைவில் நேரடி நியமனம் நடைபெற உள்ளதால் விண்ணப்பிக்க உள்ளோர் காலி பணியிடங்கள் விவரம், இனசுழற்சி ஒதுக்கீடு விவரம் மற்றும் பிற விவரங்கள் ஏதேனும் தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட வட்டாரங்களில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம்.