மணப்பெண் காதலனுடன் ஓட்டம்: மாப்பிள்ளை தவிப்பு
நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த நடராஜன். இவரது மகன் கண்ணன் (25). தபால் நிலையத்தில் தற்காலிக போஸ்ட்மேனாக வேலை செய்து வருகிறார். கண்ணனுக்கும் சிங்கை முப்பிடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜகோபால் மகள் சீதா (21) க்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. உவரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று காலை திருமணம் நடப்பதாக இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு மாப்பிள்ளை கண்ணனுக்கு சிங்கையில் இருந்து போன் வந்தது. போனில் பேசியவர் உங்களுக்கு பேசி வைத்திருந்த மணப்பெண்ணை காணவில்லை என கூறினார். விசாரித்தபோது இரவோடு இரவாக சீதா மாயமானது தெரிய வந்தது. இதையடுத்து மாப்பிள்ளை வீட்டார் ஒரு வேனில் சிங்கை வந்தனர். அவர்கள் விசாரித்தபோது சீதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் காதல் இருந்து வந்ததும் இருவரும் திருமணத்துக்கு முந்தைய நாள் ஊரை வீட்டு ஓடியதும் தெரியவந்தது. சீதா காதலனுடன் ஓடியதால் பெண் வீட்டாருக்கும், மாப்பிள்ளை வீட்டாருக்கும் தகராறு ஏற்பட்டது. இதன்பிறகு மாப்பிள்ளை வீட்டார் அங்கிருந்து புறப்பட்டு திசையன்விளை வந்தனர். நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் திருமணம் நடத்த வேண்டும் என மாப்பிள்ளை வீட்டார் எண்ணினர். இதற்காக இரவிலேயே பெண் பார்த்து காலையில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கல்லிடைகுறிச்சியை சேர்ந்த பிரம்மலட்சுமியை மணப்பெண்ணாக தேர்வு செய்தனர். மணப்பெண்ணும், மணமகனும் குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு கண்ணன், பிரம்மலட்சுமிக்கு தாலி கட்டினார். குறித்த நேரத்தில் திருமணம் நடந்தது.