சென்னையில் மின்வெட்டு நேரம் குறைப்பு: ஜெ., அறிவிப்பு
தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு குறித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ’’தமிழ்நாட்டில் நிலவி வரும் மின்பற்றாக்குறையை குறைப்பது குறித்து இன்று விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சாரங்கி, எரிசக்தி துறையின் முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கடந்த சில வாரங்களாக காற்றாலைகளின் மூலம் அதிக அளவு மின்சாரம் கிடைப்பதன் காரணமாக, தமிழ்நாட்டின் மின் நிலைமை தற்போது கணிசமான அளவு முன்னேற்றம் அடைந்திருக்கிறது.
தீ விபத்தால் செயல்படாமல் இருந்த மேட்டூர் அனல் மின் நிலையம் தனது முழு உற்பத்தித் திறனான 840 மெகாவாட் மின் உற்பத்தியை செய்யத் தொடங்கிவிட்டது. இந்தச் சூழ்நிலையில், தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நாளை முதல் தளர்த்த இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இதன்படி, உயர் அழுத்த மற்றும் குறைந்த அழுத்த தொழிற்சாலைகளுக்கான வாரம் ஒரு நாள் மின்சார விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை கட்டாய மின்சார விடுமுறை ஆகியவை முற்றிலுமாக நீக்கப்படும். தற்போது சென்னையில் நிலவும் மின் வெட்டு இரண்டு மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரமாகவும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் நான்கு மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரமா கவும் குறைக்கப்படும்.
தற்போது பணிகள் நடைபெற்று வரும் அனல் மின் நிலையத் திட்டங்கள் மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டம் ஆகியவை விரைவில் செயல்படத் துவங்கும். எனவே, தற்போதுள்ள மின் கட்டுப்பாடுகள் படிப்படியாக விரைந்து தளர்த்தப்படும். அவை குறித்து மீண்டும் அடுத்த மாதம் ஆய்வு நடத்தப்பட்டு உரிய முடிவுகள் எடுக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.