அவனியாபுரத்தில் ஒருவர் எரித்து கொலை: 3 பேர் கைது
மதுரை அவனியாபுரத்தில் பாண்டிமுருகன் என்பவரை எரித்து கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த 2009 ல் விருதுநகர் பாண்டிநகரைச் சேர்ந்த பாண்டிமுருகன் திடீரென மாயமானார்.
போலீசார் அவரை தேடி வந்தநிலையில், மதுரை அவனியாபுரம் பகுதியில் அடையாளம் தெரியாத ஒரு ஆண்பிணம் கிடந்தது. விசாரணையில் அவர் விருதுநகரில் காணாமல் போன பாண்டிமுருகன் எனதெரிந்தது.
இக்கொலை தொடர்பாக இன்ஸ்பெக்டர்கள் ஜெயச் சந்திரன், சேதுமணி மாதவன் தலைமையில் 2 தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி, மதுரை எல்லீஸ்நகர் அழகர்,37, வில்லாபுரம் ராமச்சந்திரன், 48, அவனியாபுரம் கண்ணன்,26 ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரித்ததில், பழிக்கு பழியாக பல கொலைகள் நடந்தது தெரிந்தது.
எரித்து கொலை செய்யப்பட்ட பாண்டிமுருகனும், மதுரையை சேர்ந்த சுரேஷ் என்பவரும் பல கொலை, கொள்ளைகளை நடத்தி வந்தனர்.
பணம் பங்கிடுவதில் இருவருக்கும் தகராறு ஏற்படவே, சுரேஷை, பாண்டிமுருகன் வெட்டினார். எனவே, பாண்டிமுருகனை பழிவாங்க சுரேஷ் ஏற்பாடு செய்தார். இதையறிந்த பாண்டிமுருகன், விருதுநகரில் குடியேறினார். அவரை கொலை செய்ய தருணத்தை சுரேஷ் எதிர்பார்த்திருப்பதை, அவரது கூட்டாளி நாகராஜன், பாண்டிமுருகனிடம் தெரிவித்தார். இதை அறிந்த சுரேஷ், கடந்த 2007ல் நாகராஜனை கொலை செய்தார்.
பாண்டிமுருகனையும் கொலை செய்ய சுரேஷ் விருதுநகர் சென்றார். ஆனால், அங்கு பாண்டிமுருகன் முந்திக்கொண்டு, சுரேஷை கொலை செய்தார். எனவே, சுரேஷின் கூட்டாளிகள் பாட்ஷா, கண்ணன், பாலா ஆகியோர் பாண்டிமுருகனை கொலை செய்ய திட்டமிட்டனர்.
இதற்கு அவனியாபுரத்தைச் சேர்ந்த இருளப்பனின் உதவியை நாடினர். இருளப்பனும், அவரது உறவினர் அழகரும் விருதுநகர் சென்று, பாண்டிமுருகனை மதுரைக்கு அழைத்து வந்து, எரித்துக் கொலை செய்தனர். இக்கொலை தொடர்பாக நேற்று அழகர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய இருளப்பன் ஏற்கனவே இறந்து விட்டார். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும், சிலர் வேறு வழக்குகளில் ஜெயில்களில் உள்ளனர். போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.