குமாரசாமிக்கு முன்ஜாமீன் கிடைக்குமா?
நில முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் கேட்டு குமாரசாமி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஐகோர்ட்டு தள்ளிவைத்தது.
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி மீது மகாதேவ சாமி என்பவர் லோக் அயுக்தா கோர்ட்டில் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர், `2007-ம் ஆண்டு குமாரசாமி ஆட்சி காலத்தில் அர்காவதி லே-அவுட் அமைப்பதற்காக தனிச்சந்திராவில் 3.8 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. விதிமுறைகளை மீறி அந்த நிலம் மறுஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது' என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, மே 31-ந்தேதியோ (நேற்று) அல்லது அதற்கு முன்பாகவோ குமாரசாமி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஜுன் 2-ந்தேதிக்கு (நாளை) தள்ளிவைத்தது.
இதற்கிடையே, குமாரசாமி இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு கர்நாடக ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, கடந்த ஏப்ரல் மாதம் 16-ந்தேதி குமாரசாமிக்கு 6 வார காலம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
அதே வேளையில், முன்ஜாமீன் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. இருதரப்பு வாதங்களும் நேற்று முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி கே.என்.கேசவநாராயணா தள்ளிவைத்தார்.