பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.60 குறைகிறது
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.60 குறைகிறது. இந்த விலை குறைப்பு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோல் விலை கடந்த மே 23-ந் தேதி நள்ளிரவு வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியை காரணமாக வைத்து, விலை உயர்த்தப் பட்டது. லிட்டருக்கு ரூ.7.98 வரை உயர்த்தப்பட்டதால், நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.
மத்திய மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரசின் தலைவரும், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து பேரணி நடத்தினார்.
மற்றொரு முக்கிய கூட்டணி கட்சியான தி.மு.க., நேற்றுமுன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
அ.தி.மு.க. சார்பில் கடந்த 29-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத் தப்பட்டது. எதிர்க்கட்சிகளின் அழைப்பின்பேரில் நேற்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இவ்வளவு எதிர்ப்பு எழுந்த போதிலும், பெட்ரோல் விலை உயர்வை வாபஸ் பெற மத்திய அரசு மறுத்து வந்தது.
பெட்ரோல் விலை உயர்வை தொடர்ந்து, டீசல், சமையல் கியாஸ், மண்எண்ணெய் ஆகியவற்றின் விலையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது. ஆனால், பெட்ரோல் விலை உயர்வுக்கு எழுந்த எதிர்ப்பு காரணமாக அப்பொருட்களின் விலையை உயர்த்தும் முடிவை மத்திய அரசு தள்ளி வைத்தது.
ஒருபுறம் பெட்ரோல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கையில், மற்றொரு புறம் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு நிலவியது. தமிழக அரசு மேற்கொண்ட முயற்சியால், 3 கப்பல்கள் மூலம் பெட்ரோல், டீசல் வரவழைக்கப்பட்டது. அதன்பிறகு பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நீங்கியது.
இந்த சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. இதனால் பெட்ரோல் விலை குறைக்கப்பட உள்ளது. இதுகுறித்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் தலைவர் ஆர்.கே.சிங்,
’’சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 2 வாரங்களாக சரிவடைந்து வருகிறது. எனவே, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.50 குறைக்கப்பட வாய்ப்புள்ளது. இன்னும் கூட அதிகமாக குறைக்கலாம். ஆனால், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக, இந்த அளவுக்குத்தான் குறைக்க முடியும்.
வரிகள் அனைத்தையும் சேர்த்து, பெட்ரோல் விலை சுமார் 2 ரூபாய் குறையும். இதுதொடர்பாக இன்று எண்ணெய் நிறுவனங்கள் கூடி முடிவு செய்யும். நாளை (இன்று) அம்முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
பெட்ரோல் விலையை குறைக்குமாறு பெட்ரோலிய அமைச்சகம் எங்களிடம் கூறவில்லை. கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் நாங்களாகவே வழக்கமான பாணியில் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.
டீசல், சமையல் கியாஸ் விலையை உயர்த்துவது பற்றி மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், கச்சா எண்ணெய் விலை சரிவு காரணமாக, டீசல், சமையல் கியாஸ் விற்பனை மூலம் ஏற்படும் நஷ்டம் குறைந்துள்ளது’’ என்று கூறினார்.
ஆர்.கே.சிங் கூறியபடி, பெட்ரோல் விலை குறைப்பு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லிட்டருக்கு ஒரு ரூபாய் 60 காசுகள் விலை குறையும் என்று தெரிகிறது.