மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்! ஜெயலலிதா அறிவிப்பு!

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. சார்பில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு வருகிற 29 ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 7 ரூபாய் 50 காசு என்ற அளவிற்கு கடுமையாக உயர்த்தி இருக்கிறது. இது வரலாற்றில் எப்பொழுதுமே நிகழ்ந்திராத, ஓர் அடாத செயல். இந்த கடும் விலை உயர்வினை கண்டித்து ஏற்கனவே நான் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தேன். இந்த விலை உயர்வை நாடே கடுமையாக எதிர்க்கிறது.
இன்று நிலவுகின்ற பொருளாதார சூழலில் இவ்வளவு கடுமையான விலை உயர்வை மக்களால் தாங்க இயலாது என்பதால், இந்த விலை உயர்வை முற்றிலும் கைவிட வேண்டும் என்று மத்திய அரசை மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமல், சரிந்து வரும் இந்திய ரூபாயின் மதிப்பை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமல், பண வீக்கத்தை கட்டுப்படுத்தாமல், கின்னஸ் சாதனை படைக்கும் அளவுக்கு பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 7 ரூபாய் 50 காசு என்ற அளவிற்கு உயர்த்தி மக்களை பெருத்த இன்னலுக்கு ஆளாக்கியுள்ள மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசை கண்டித்தும், இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும், கழக அமைப்பு ரீதியான 52 மாவட்ட தலைநகரங்களிலும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பும், கழக அமைப்புகள் செயல்பட்டு கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பும், 29.5.2012 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 11 மணி அளவில், அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார்.