புதுக்கோட்டை: வாகன சோதனையில் 12.35 லட்சம் பறிமுதல்
புதுக்கோட்டை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு புதுக்கோட்டை தொகுதியில் செக்போஸ்ட்கள் அமைக்கப்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இன்று மாலை நடந்த வாகன சோதனையில் இரண்டு கார்களிலிருந்து 12.35 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையிலிருந்து கீழக்கரை நோக்கி சென்று கொண்டிருந்த ஜாகிர் உசைன் என்பவரது காரில் சோதனை நடத்தப்பட்ட போது 3.35 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
சிவபுரம் செக்போஸ்டில் நடந்த வாகன சோதனையில் 9 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் எங்கிருந்து வந்தது, யாருக்கு சொந்தமானது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜுன்) 12-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தாக்கல் செய்யப்பட்ட 34 வேட்பு மனுக்களில் 9 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 25 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
வேட்பு மனுக்களை வாபஸ் பெற வருகிற 28-ந் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினமே மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். ஜுன் 12-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். 15-ந் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.