மூச்சு திணறும் நிலையில் இருக்கிறார் மம்தா பானர்ஜி: ரவி சங்கர் பிரசாத்
பா.ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் கடந்த 2 நாட்களாக மும்பையில் நடந்தது. நேற்று கூட்டம் முடிந்ததும் அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மே.வங்காள முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி, மத்திய அரசுடன் சுமுக உறவு இல்லாமல் அதிருப்தியில் இருக்கிறார். அவரை பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்த்து, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மேலும் வலு சேர்க்கப்படுமா?'' என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு பதில் அளித்து ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது:
மம்தா பானர்ஜி முன்பு தேசிய ஜனநாயக கூட்டணியிலும் இடம் பெற்று இருந்தார். வாஜ்பாய் தலைமையிலான மந்திரி சபையில் இடம் பெற்று இருந்தார். எங்களுடன் அவர் பணியாற்றியபோது, அவருக்கு உரிய முக்கியத்துவம், மதிப்பு, மரியாதையை நாங்கள் கொடுத்தோம்.
இப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்று இருந்தாலும், அங்கு வெளியில் சொல்ல முடியாத அதிருப்தியில், கிட்டத்தட்ட மூச்சு திணறும் நிலையில் இருக்கிறார். முதலில் அவர் எங்களை அணுகட்டும்.
இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.