தாலி கட்டும் நேரத்தில் மணமகள் ஓட்டம்! கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரைச் சேர்ந்தவர் சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் அவரது தாய் மாமன் ஆசிரியராக வேலை பார்ப்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த திருமணம் வெள்ளிக்கிழமை (25.05.2012) காலை 6.30 மணியில் இருந்து 7.30 மணிக்குள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. திருமணத்திற்காக திருவிடை மருதூரில் உள்ள திருமண மண்டபம் முன்பதிவு செய்யப்பட்டது. 24.05.2012 அன்று இரவு திருமண மண்டபத்தில் திருமண சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மணமகன், மணமகள் உறவினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் மகிழ்ச்சியுடன் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு இருந்தனர்.பின்னர் மணப்பெண்ணும் தனது அறைக்கு தூங்க சென்றார். அதிகாலை 2.30 மணியளவில் மணப்பெண் அறையில் பார்த்த போது மணப் பெண் சாந்தியை காணவில்லை. அவர் அங்கிருந்து வெளியேறியது தெரிய வந்தது. காலை 6.30 மணிக்கு தான் திருமணம் என்பதால் மணப்பெண்ணின் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினார்கள். மணப்பெண் தனது தோழி வீட்டிற்கு சென்று இருப்பார். காலை வந்து விடுவார் என அவர்கள் நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் காலை வரை மணப்பெண் சாந்தியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் திருமணம் நின்றது. திருமணத்திற்கு வந்தவர்கள் சோகம் அடைந்தனர். மணப்பெண்ணின் குடும்பத்தினர் கவலையுடன் திருமண மண்டபத்தில் அமர்ந்து இருந்தனர். திருமண மண்டபம் களை இழந்து காணப்பட்டது. மணமகளுக்கு கொடுக்க கொண்டு வரப்பட்ட சீர்வரிசைகள் அங்கு ஓரமாக வைக்கப்பட்டு இருந்தது. திருமணத்திற்கு வருபவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சாப்பாடுகளும் வீணானது. மணமகன் கேட்டுக் கொண்டதன் பேரில் போலீசில் புகார் கொடுத்ததை மணமகள் வீட்டார் திரும்ப பெற்றுக் கொண்டனர். தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் மாயமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.