பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்தது
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த மார்ச் மாதம் 12-ந்தேதி தொடங்கி 2 கட்டங்களாக நடைபெற்றது.
பாராளுமன்ற மக்களவையில் நேற்று நடைபெற்ற நிறைவு நாள் கூட்டத்தில் சபாநாயகர் மீராகுமார் உரையாற்றினார். இந்த கூட்டத்தில் நீதித்துறை தரம் மற்றும் நம்பகத்தன்மை சட்ட மசோதா, பதிப்புரிமை திருத்த சட்ட மசோதா உள்பட 20 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
மொத்தம் 34 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத் தொடர், ஏறத்தாழ 181 மணி, 38 நிமிட நேரம் நீடித்தது. முதல் கட்டத்தில் 14 நாட்களும், ஏப்ரல் 24-ந்தேதி தொடங்கிய இரண்டாம் கட்டத் தொடரில் 20 நாட்களும் கூட்டம் நடைபெற்றது.
கடந்த மார்ச் 14-ந்தேதி ரெயில்வே பட்ஜெட்டும், 16-ந்தேதி பொது பட்ஜெட்டும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மூலம் 5 முக்கிய பிரச்சினைகள் கூட்டத்தில் எழுப்பப்பட்டன.
சில முக்கிய பொருட்கள் குறித்து 56 அறிக்கைகள் மந்திரிகள் மூலம் தாக்கல் செய்யப்பட்டன. 53 தனிநபர் சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. குறுக்கீடுகள் மற்றும் சபை தள்ளிவைக்கப்பட நேர்ந்ததன் மூலம் 48 மணி, 24 நிமிட நேரம் வீணாக விரயமானதாகவும் சபாநாயகர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இந்த இழப்பை ஈடு செய்வதற்காக, கூடுதலாக 41 மணி நேரம் கூடுதலாக சபை நீடிக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் 60-வது ஆண்டு விழாவையொட்டி, கடந்த 13-ந்தேதி அன்று பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது.
கேள்வி நேரம் முடிந்ததும் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த 634 பிரச்சினைகள் உறுப்பினர்களால் எழுப்பப்பட்டன. 377-வது விதியின் கீழ் 434 பிரச்சினைகள் எழுப்பப்பட்டன. நேற்றுடன் கூட்டத் தொடர் முடிவடைந்து, சபை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.
டெல்லி மேல்-சபையின் 225-வது கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்து, சபை தேதி குறிப்பிடாலம் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. இந்த தொடர், அதிக பட்ச நேரம் நடைபெற்றதாக சபைத் தலைவர் ஹமீது அன்சாரி தெரிவித்தார்.
இந்த தொடரின்போது 58 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்தது. நடிகை ரேகா, கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் ஆகிய இரு நியமன உறுப்பினர்கள் உள்பட 61 புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்.