விழுப்புரத்தில் பரபரப்பு : 58 வயது மூதாட்டிக்கு குழந்தை பிறந்தது
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, 58 வயது மூதாட்டி ஒருவர், 65 வயது கணவருடன், நேற்று காலை, 9 மணியளவில் வந்தார். தனக்கு வயிறு வலிப்பதாக கூறிய மூதாட்டி, டாக்டர் வரும் வரை காத்திருந்தார்.
இதற்கிடையே, கழிவறைக்கு சென்ற மூதாட்டிக்கு, திடீரென ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவமனை ஊழியர்கள், அதிர்ச்சி அடைந்து, மூதாட்டியிடம் விசாரித்த போது, தான் கர்ப்பமாக இருந்ததே தெரியாது என்றும், வயிற்று வலிக்கு, சிகிச்சைக்கு வந்ததாகவும் கூறினார்.
மூதாட்டிக்கு குழந்தை பிறந்ததை கேட்டு, அவரது கணவர், ஆட்டோ அழைத்து வரச் சென்று விட்டார். குழந்தை பிறந்த தகவல் தெரியவே, ஆட்டோ டிரைவர் ஒருவர், குழந்தையை தன்னிடம் தத்து கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்குள் ஆட்டோவை அழைத்து வந்த முதியவர், மூதாட்டியை அவசரமாக அழைத்துச் சென்று விட்டார். அவர்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்ற விவரத்தை, யாரிடமும் தெரிவிக்கவில்லை. இச்சம்பவம், செஞ்சியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.