எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல்! மாஜி டி.எஸ்.பி மீது வழக்கு பதிவு!
சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் எஸ்.ஐ.,யை பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் டி.எஸ்.பி., மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.
சேலம்- திருச்சி மெயின் ரோட்டில் ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் என்ற நிறுவனம் உள்ளது. இங்கு, வாகன கடன் வழங்கப்படுகிறது. தீவட்டிப்பட்டி அடுத்த தும்பிபாடியை சேர்ந்த அம்மாசி மகன் ஆசைத்தம்பி என்பவர், ஃபைனான்ஸில் கடன் பெற்று ஒரு மோட்டார் சைக்கில் வாங்கியுள்ளார். பின்னர் முழுகடனையும் அடைக்காமல், அந்த மோட்டார் சைக்கிளை வேறு ஆளுக்கு விற்பனை செய்து விட்டார்.
அதே நேரத்தில், அந்த வாகனத்துக்கான தவணைத்தொகை செலுத்தாமல் போக்குக்காட்டியுள்ளார். அதனால், டூவீலரை ஒப்படைக்கும்படி, ஃபைனான்ஸ் மேலாளர் முனீஸ்வரன் அடிக்கடி எச்சரித்தும் பணம் கட்டவில்லை.
இதையடுத்து, ஃபைனான்ஸ் வசூல் அதிகாரியான, முன்னாள் போலிஸ் டி.எஸ்.பி., கோபால், வீடு தேடிச் சென்று, "கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால் குடும்பத்தையே உள்ளே தள்ளிவிடுவேன்' எனக் கூறி, ஆசைதம்பியிடம் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, தீவட்டிப்பட்டி போலீசில் ஆசைத்தம்பி புகார் செய்துள்ளார். புகாரில் சிக்கியவர் ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் வழக்கு கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், ஃபைனான்சில் கடன் பெற்று மோசடி செய்து விட்டதாக ஆசைத்தம்பி மீது, கடந்த ஜனவரி 28-ல், ஒரு புகார் செய்யப்பட்டது. அந்த புகாரின் மீது உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில், சம்பவம் நடந்த இடம் செவ்வாய்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டதால், அங்கு சென்று புகார் செய்ய வேண்டும் என்றும் அல்லது மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்யும்படியும், ஃபைனான்ஸ் மேலாளர் முனீஸ்வரனுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மறுநாள் (29ம் தேதி) முன்னால் டி.எஸ்.பி., கோபால், தீவட்டிப்பட்டி காவல் நிலையத்துக்கு சென்று, ஆசைத்தம்பி மீது வழக்குப்பதிவு செய்யுமாறு கெடுபிடி செய்துள்ளார். அதற்கு, எஸ்.ஐ., ராஜேஸ்வரி மறுத்ததால், ""நான் யார் தெரியுமா ? நீ எந்த பேட்ஜ் எஸ்.ஐ.,'' என்று கேட்டு விட்டு ராஜேஸ்வரிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த பிரச்னை சம்மந்தமாக சேலம் மாவட்ட எஸ்.பி., அஸ்வின்கோட்னீஸ் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. இது தொடர்பாக, உரிய விசாரணை நடத்தி அறிக்கை தரும்படி, கூடுதல் எஸ்.பி., ஈஸ்வரனுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தீவட்டிப்பட்டி எஸ்.ஐ., ராஜேஸ்வரி மற்றும் அன்று பணியில் இருந்த போலீஸார் ஆசைத்தம்பியிடமும், முனீஸ்வரனிடமும் தனித்தனியே விசாரணை நடத்தினர். விசாரணையில், முன்னாள் டி.எஸ்.பி., கோபால் கொலை மிரட்டல் விடுத்தது உறுதி செய்யப்பட்டது.
அதையடுத்து, பெண் எஸ்.ஐ.,யை பணி செய்ய விடாமல் தடுத்தது, கொலை மிரட்டல் விடுத்த முன்னால் டி.எஸ்.பி., மீது தீவட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இப்போது அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.