கள்ளக்காதல் ஜோடிகளால் நடமாட அச்சம்! போலீசாரிடம் பொதுமக்கள் குற்றச்சாட்டு!
புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் போலீசார்-பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் சனிக்கிழமை (12.05.2012) நடைபெற்றது. கூட்டத்துக்கு ரூரல் போலீஸ் சூப்பிரண்டு பழனிவேலு தலைமை தாங்கினார். திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் திருக்கனூர் போலீஸ் சரகத்துக்குட்பட்ட மண்ணாடிப்பட்டு, செட்டிப்பட்டு, செல்லிப்பட்டு, சோரப்பட்டு, வம்புபட்டு, வாதானூர் உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்தனர். கூட்டத்தில் வம்புபட்டை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கூறுகையில், வம்புபட்டு ஏரிக்கரையில் தினமும் கள்ளக்காதல் ஜோடிகள், காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்து தவறான செயல்களில் ஈடுபடுகின்றன. அங்கு குடிநீர் வசதிக்காக போடப்பட்ட சிமெண்டு குழாய்களில் அமர்ந்து காமகளியாட்டம் புரிகின்றனர். இதுபோன்ற செயல்களினால் விவசாயிகள் மற்றும் கிராம பொதுமக்கள் அவ்வழியே செல்பவர்கள் தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என்றார். செல்லிப்பட்டை சேர்ந்த ஒருவர் கூறும்போது, செல்லிப்பட்டில் சூதாட்டம் ஜரூராக நடைபெறுவதாகவும், இங்கு பல்வேறு ஊர்களில் இருந்து வந்து பெரிய அளவில் சூதாட்டம் நடப்பதாகவும், இதனை தடுக்காவிட்டால் வரும் காலங்களில் சட்டம்-ஒழுங்கு சீர்குலையும் என்றார். கூட்டத்தில் மேலும் பலர்,கிராமங்களில் போலீசாரின் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
இதைத்தொடர்ந்து கூட்டத்தின் முடிவில் பேசிய ரூரல் போலீஸ் சூப்பிரண்டு பழனிவேலு, பொதுமக்களின் குறைகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் ஏதாவது குறைகள் மற்றும் புகார் தெரிவிக்க விரும்பினால் எனது செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றார்.