நித்யானந்தா தகுதியானவர் அல்ல! தருமபுர ஆதீனம்
மதுரை ஆதீனத்துக்கும், நித்யானந்தாவுக்கும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இதுவரை தனித்தனியாக அறிக்கைகள் வெளியிட்ட அனைவரும் ஒன்று சேர்ந்து ஆதீன மீட்புக்குழு என்ற அமைப்பை உருவாக்கினர். இந்த அமைப்பின் ஆலோசனை கூட்டம் மதுரை வடக்குமாசி வீதியில் உள்ள தருமபுர ஆதீன மண்டபத்தில் இன்று (13/05/2012) நடந்தது. வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்ய ஞான மகாதேவ பரமாச்சர்ய சுவாமிகள் இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். தருமபுர ஆதீனம் முத்துக்குமார சுவாமி தம்பிரான், திருவாவடுதுறை சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள், திருப்பனந்தாள் இளைய ஆதீனம் சுந்தர மூர்த்தி தம்பிரான், குரு மாதாஜி சங்கரியம்மாள், சுவாமி அகிலானந்தா, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் நெல்லை கண்ணன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், பாரதீய பார்வர்டு பிளாக் தலைவர் முருகன்ஜி, தேவர் தேசிய பேரவை தலைவர் திருமாறன், இந்து இளைஞர் பேரவை எம்.என்.ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். கூட்டம் முடிந்ததும் தருமபுர ஆதீனம் முத்துக்குமார சுவாமி தம்பிரான் கூறியதாவது:- மதுரை ஆதீனம் ஆரம்ப காலத்தில் தி.மு.க. மாணவரணி செயலாளராக இருந்தார். தற்போது முதல்வர் ஜெயலிதாவுக்கு ஆதரவாக இருப்பதாக அறிக்கைகள் மற்றும் பேட்டிகள் கொடுத்து கொண்டு இருக்கிறார். முன்பு குட்டி சாமியாரை இளைய ஆதீனமாக நியமிக்கலாமா? என்று எங்களிடம் ஆலோசனை கேட்டார். அப்போது நாங்கள் உங்களுக்கு இன்னும் வயதாகட்டும். அப்போது பார்த்து கொள்ளலாம் என்று கூறினோம். ஆனால் அதை கேட்காமல் இளைய ஆதீனமாக நியமித்தார். பின்னர் அவரை விட்டு விட்டார். இப்போது நித்யானந்தாவை நியமித்துள்ளார். அதற்கு அவர் தகுதியானவர் அல்ல. இதை சொன்னால் ஆதீன மடங்களில் காமிரா பொருத்த தயாரா? என்று கேட்கிறார். எங்களது மனசும், செயலும் சுத்தமானது. காமிரா பொருத்த தயாராக இருக்கிறோம். நாங்கள் அவரிடம் எதுவும் பேச விரும்பவில்லை. மதுரை ஆதீனத்துடன்தான் பேச விரும்புறோம். இந்த கூட்டத்திற்கு கூட அவரை அழைத்தோம். ஆனால் அவர் வரவில்லை. நித்யானந்தா அனல் வாதம், புனல் வாதம் ஆகியவற்றுக்கு தயாரா என்று எங்களை பார்த்து கேட்கிறார். முதலில் அவர் திருஞானசம்பந்தரை போல ஆன்மீக சித்து செய்து காட்டட்டும். அதன் பின்பு பார்க்கலாம். சைவ சமயத்தில் ஏதாவது பிரச்சினை வந்தால் நாங்கள் தலையிடுவோம். நித்யானந்தாவை நீக்கும்வரை எங்களது போராட்டம் தொடரும். வேளாக்குறிச்சி ஆதீனம் கூறியதாவது:- மதுரை ஆதீன மீட்புக்குழு என்பது ஆதீனத்தின் செயல் பாடு திருத்தப்பட வேண்டும், சைவ ஆதீன மடத்திற்கு சில மரபுகள் உள்ளது. அதை பின்பற்ற வேண்டும். எனவே இளைய ஆதீனமாக நித்யானந்தா மரபுகளை கடைபிடிக்காதவர். எனவே அவரை நீக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.