ஐ.ஜி. பிரமோத் குமார் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை
திருப்பூர் பாசி போரெக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. பிரமோத் குமார் கோவை அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய ஜாமீன் மனு மீது இன்று (வியாழக்கிழமை) விசாரணை நடைபெறுகிறது.
திருப்பூர் பாசி போரெக்ஸ் நிதி நிறுவன மோசடியை மறைக்க ரூ.2 கோடியே 85 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. பிரமோத் குமாரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர். அவரிடம் சி.பி.ஐ. போலீசார் 5 நாட்கள் விசாரணை முடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை ஜெயிலில் அடைத்தனர். தன்னால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட கைதிகள் கோவை சிறையில் இருப்பதால் பாதுகாப்பு கருதி தன்னை சென்னை ஜெயிலில் அடைக்க வேண்டும் என்று சி.பி.ஐ. கோர்ட்டில் பிரமோத் குமார் முறையிட்டார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. கோவை சிறையில் இருந்த அவர் மிகவும் சோர்வாக காணப்பட்டார். மற்ற கைதிகளை பார்க்கும் போதெல்லாம் அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமானது. இதனால் அவ்வப்போது அவர் மயங்கி விழுந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீரென்று ரத்த அழுத்தம் அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் தரையில் படுத்து உருண்ட ஐ.ஜி. பிரமோத் குமார், ``தன்னை உடனே தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்க வேண்டும் என்றார்.
ஆனால் அதற்கு ஜெயில் அதிகாரிகள் மறுத்து விட்டனர். கோர்ட்டு உத்தரவு படித்தான் நடக்க முடியும் என்றனர். இதையடுத்து ஜெயிலில் உள்ள ஆஸ்பத்திரியில் ஐ.ஜி. பிரமோத் குமார் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரின் ரத்த அழுத்தம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருடைய இதய துப்பு, மனநிலை ஆகியவற்றையும் டாக்டர்கள் கண்காணிக்கிறார்கள்.
இதற்கிடையில் ஐ.ஜி.பிரமோத் குமாரின் ஜாமீன் மனு கோவை சி.பி.ஐ. கோர்ட்டில் நீதிபதி ராமசாமி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஐ.ஜி. பிரமோத் குமார் தரப்பில் ஆஜரான வக்கீல் ``சி.பி.ஐ. தரப்பில் தாக்கல் செய்த மனுவை படித்து பார்க்க கால அவகாசம் வேண்டும் எனவே ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 11-ந் தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும்'' என்றார். ஆனால் சி.பி.ஐ. தரப்பு வக்கீல் ``வருகிற 11-ந் தேதி தங்களுக்கு சென்னை கோர்ட்டில் வழக்கு ஒன்றில் ஆஜராக வேண்டி இருப்பதால் அன்றைய தேதி ஆஜராக முடியாது என்றும் எனவே 14-ந் தேதிக்கு தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும்'' என்றனர்.
பாசிநிதி நிறுவன இயக்குனர் தரப்பில் ஆஜரான வக்கீல் ஞானபாரதி மற்றும் பாண்டியராஜன் ஆகியோர், இந்த வழக்கு தொடர்பான அனைத்து விபரங்களும் தங்களுக்கு தெரியும் என்பதால் தாங்கள் விசாரணைக்கு தயாராக இருப்பதாக கூறினார்கள். முத்தரப்பின் வாதங்களை கேட்டறிந்த நீதிபதி ராமசாமி, ஐ.ஜி. பிரமோத் குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைக்கு (இன்று) தள்ளி வைப்பதாக அறிவித்தார்.