ஏழை விவசாயியின் மகன் ஐ.ஏ.எஸ். தேர்வில் சாதனை
ராமநாதபுரத்தை சேர்ந்த ஏழை விவசாயியின் மகனான கோபால் சுந்தரராஜ் ஐ.ஏ.எஸ். தேர்வில் சாதனை படைத்துள்ளார்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட பணிகளுக்காக நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாயின. இதில் இந்தியா முழுவதும் 910 பேர் தேர்வாகியுள்ளனர்.
ராமநாதபுரத்தை சேர்ந்த எம்.எஸ்சி. பட்டதாரியான கோபால் சுந்தரராஜ் (வயது 25) இந்த தேர்வில் இந்திய அளவில் 5-வது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
கோபால சுந்தரராஜின் சொந்த ஊர் கீழக்கரை அருகே உள்ள மாவிலாத்தோப்பு கிராமம். இவருடைய தந்தை பெயர் சண்முகவேலு. விவசாயி. தாயார் ராஜம்மாள். கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு சண்முகவேலு காலமாகி விட்டார்.
ஏழை விவசாயியின் மகனான கோபால் சுந்தரராஜ், பள்ளிப்படிப்பு, பட்டப்படிப்புகளை முடித்து, தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள வேளாண்மை பல்கலைக் கழகத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். அங்கிருந்தபடியே ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார்.
தன் தாய்மாமனான ஓய்வு பெற்ற அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாரியப்பன் ஆதரவில் படித்து இந்த சாதனையை எட்டியுள்ளார்.