தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நிற்பார்கள்! மகனை வைத்து கட்சியை துவங்குவார்கள்! கருணாஸ் பேட்டி!
தேவர் புலிப்படையின் நிறுவனத் தலைவராக இருக்கும் நடிகர் கருணாஸ், கோவையில் (05.05.2012) முதன் முதலாக பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
கருணாஸ் பேசுகையில், சாதி ரீதியாக கள்ளர், மறவர், அகமுடையர் என்று தேவர் சமுதாயம் பிரிந்து கிடக்கிறது. இவர்கள் எல்லோரையும் ஒருங்கிணைப்பதற்காக சாதி வாரியான கணக்கெடுப்பில் தேவர் என்று மட்டுமே தேவர் இன மக்களை கூறும்படி கேட்டுக்கொள்கிறேன்.
கொடுப்பவன் தேசியவாதி. எடுப்பவன் அரசியல்வாதி
தேவர் இனத்துக்கென்று பல அரசியல் கட்சிகள் இருக்கின்றன. ஆனால் அந்த அரசியல் கட்சிகளெல்லாம் ஓட்டுக்காக மட்டுமே மக்களை உபயோகப்படுத்துகிறது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சொன்னதுபோல், தேசத்திற்காக எதையும் கொடுப்பவன் தேசியவாதி. தேசத்தில் இருந்து எதையும் எடுப்பவன்தான் அரசியல்வாதி அப்படி ஒரு அரசியல்வாதிகயாக நான் மாறமாட்டேன்.
எந்த காலத்திலும் இந்த அமைப்பு அரசியல் கட்சியாக உருவெடுக்காது. ஆனால் சினிமாவில் இருப்பவர்கள் சினிமாவின் மூலம் புகழை வளர்த்துக்கொண்டு, தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நிற்பார்கள். ஜெயிப்பார்கள். பின் தன் மகனை வைத்து கட்சியை துவங்குவார்கள்.
தனிமைப்படுத்தப்பட்டேன்
நான் நிறைய ஏழைக் குழந்தைகளை படிக்க வைக்கிறேன். இந்த அமைப்பை நடத்துவதற்கு என்னுடைய வருமானத்தில் இருந்து 30 சதவீதத்தை ஒதுக்க முடியும். சினிமாவில் இருந்துகொண்டு சாதி ரீதியாக ஒரு அடையாளத்தை தேர்ந்தெடுத்தால் தனிப்படுத்தப்படுவாய் என்று எச்சரித்தார்கள். அதேபோல் தனிமைப்படுத்தப்பட்டேன். அந்த தனிமைப்படுத்தலில் இருந்து என்னுடைய கடின உழைப்பின் மூலமாகவே நான் சினிமாவில் ஒரு நிரந்தர இடத்தை பிடித்துக்கொண்டிருக்கிறேன். நாளைக்கே நான் ரஜினி, நாளைக்கே நான் கமல்
அரசியல்வாதிக்கும் சரி, சினிமாகாரர்களுக்கும் சரி பொதுமக்கள் மட்டுமே எஜமானர்கள். பொதுமக்கள் நினைத்தால் நாளைக்கே நான் ரஜினிகாந்த், நாளைக்கே நான் கமலஹாசன் என மாறமுடியும். அப்படிப்பட்ட பொதுமக்களுடன் நான் தனிப்பட்ட சாதியைச் சேர்ந்தவனாக காட்டிக்கொள்ளவில்லை. எல்லா சாதியினருடனும் தேவர் இன மக்கள் ஒன்றிணைந்து இருக்கவே நான் பாடுபடுகிறேன் என்றார்.